நடிகர்கள் : சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சந்தோஷ் பிரதாப், விடிவி கணேஷ், ராமசந்திர ராஜு, கே.எஸ்.ரவிக்குமார், ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி
இசை : ஹிப் ஹாப் தமிழா ஆதி
ஒளிப்பதிவு : இ.கிருஷ்ணமூர்த்தி
இயக்கம் : சுந்தர்.சி
தயாரிப்பு : குஷ்பு சுந்தர் மற்றும் ஏசிஎஸ் அருண்
மூன்று பாகங்களாக வெளியாக மக்களின் மனங்களின் இடம் பிடித்த அரண்மனை வரிசையின் நான்காவது பாகமான ‘அரண்மனை 4’ படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.
கிராமம் ஒன்றில் இருக்கும் பழைய அரண்மனையில் சில பராமரிப்பு பணிகளை செய்து அதை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபடும் சந்தோஷ் பிரதாப், தனது மனைவி தமன்னா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அந்த அரண்மனையில் வசித்து வருகிறார். அரண்மனையின் உரிமையாளரான ஜமீன்தார் டெல்லி கணேஷ், அவரது பேத்தி ராஷி கண்ணா ஆகியோரும் அதே இடத்தில் வசிக்கிறார்கள்.
இதற்கிடையே, திடீரென்று ஒரு நாள் தீய சக்தி ஒன்றின் மூலம் சந்தோஷ் பிரதாப் கொல்லப்படுகிறார். அவர் ரூபத்தில் அந்த அரண்மனைக்குள் செல்லும் அந்த தீய சக்தி அவரது குழந்தைகளை கொலை செய்ய முயற்சிக்கிறது. அதனிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்ற போராடும் தாய் தமன்னா கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். ஆனால், அவரது மரணத்தை தற்கொலையாக காவல்துறை பதிவு செய்கிறது.
விசயம் அறிந்து அந்த கிராமத்துக்கு வரும் தமன்னாவின் அண்ணன் சுந்தர்.சி தனது தங்கை மற்றும் மாப்பிள்ளை மரணத்திற்கு பின்னணியில் மர்மங்கள் நிறைந்திருப்பதை அறிந்துக் கொள்வதோடு, அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த சமயத்தில், கிராமத்தை சேர்ந்த மேலும் சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைகளுக்கான காரணத்தை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும் சுந்தர்.சி-க்கு பாக் என்ற தீய சக்தி பற்றி தெரிய வருவதோடு, அந்த பாக் தீய சக்தி, தனது தங்கை, மாப்பிள்ளை மற்றும் சில கிராம மக்கள் வரிசையில் தனது தங்கையின் மகளையும் கொலை செய்ய முயற்சிப்பதையும் அறிந்துக் கொள்கிறார். அதனிடம் இருந்து சிறுமியை காப்பாற்ற போராடும் சுந்தர்.சி, அந்த தீய சக்தியை எப்படி அழிக்கிறார்?, பாக் தீய சக்தியின் பின்னணி என்ன?, அது எதற்காக குறிப்பிட்ட மனிதர்களை கொலை செய்ய முயற்சிக்கிறது? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘அரண்மனை 4’.
நாயகனாக நடித்திருக்கும் சுந்தர்.சி, தான் ஏற்ற வேடத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை காட்சிகளில் வழக்கம் போல் வலம் வரும் சுந்தர்.சி, காதல் காட்சிகளில் அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை. காரணம், காதல் காட்சிகளே படத்தில் இல்லை.
இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நடித்திருக்கும் தமன்னா, அழுகை, பதற்றம், கோபம், ஆக்ரோஷம், பிள்ளைகள் பாசம் அனைத்துவிதமான உணர்ச்சிகளையும் ஒரே காட்சியில் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். தாயாகவும், பேயாகவும் தனது பணியை நேர்த்தியாக செய்திருக்கிறார்.
படத்தின் கதாநாயகியாக இருந்தாலும் ராஷி கண்ணாவுக்கு அதற்கான அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. சரி ஒரு பாடலாவது இருக்கும் என்றால் அம்மணிக்கு அதுவும் கிடைக்கவில்லை. திடீரென்று பளிச்சென்று வருபவர், திடீரென்று மறைந்து விடுகிறார். இறுதிக் காட்சியிலாவது அவரை சாமியாட்டம் ஆட வைப்பார்களா?, என்று எதிர்பார்த்தால் அங்கேயும் ஏமாற்றம் தான். (படம் முடிந்து டைடில் கார்டு போடும் போது இடம் பெறும் புரோமோ பாடல் ராஷி கண்னா ஆர்மிக்கு ஆறுதல் அளிக்கிறது.)
யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் ஆகியோரது காமெடி அனைத்தும் மெய் மறந்து சிரிக்க வைக்கிறது. இவர்களுடன் அவ்வபோது இணையும் மறைந்த சேசுவின் காட்சிகள் காமெடி போனஸாக அமைந்திருக்கிறது.
சந்தோஷ் பிரதாப், ராமசந்திர ராஜு, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி, சஞ்சய், கே.எஸ்.ரவிகுமார் என படத்தில் நடித்திருக்கும் மற்ற நட்சத்திரங்கள் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் படத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. அதிலும், க்ளைமாக்ஸில் வரும் அம்மன் பாடல் ஆக்ரோஷமாகவும், பக்தி மயமாகவும் அமைந்திருக்கிறது. திகில் மற்றும் கமர்ஷியல் ஜானர்களுக்கு ஏற்ற வகையில் பின்னணி இசை பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் இ.கிருஷ்ணமூர்த்தி காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருப்பதோடு, படத்திற்காக செய்த செலவுகளை காட்சிகளில் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
கலை இயக்குநரின் கைவண்ணம் காட்சிகளில் தெரிகிறது. பிரமாண்ட அம்மன் மற்றும் அசுரன் சிலை, அதனுள் நடக்கும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் என அனைத்துமே வெறும் கமர்ஷியல் படம் என்பதையும் தாண்டி ரசிகர்களை கவரக்கூடிய அம்சங்களாக அமைந்திருக்கிறது.
அரண்மனை வரிசையில் வெளியான படங்களின் வழக்கமான பாணியில் கதை நகர்ந்தாலும், படம் முழுவதும் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கொண்டாடும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருக்கிறது. குறிப்பாக வடநாட்டு மக்களை அச்சுறுத்தும் பாக் என்ற தீய சக்தியை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை ஏற்கனவே வெளியான மூன்று அரண்மனை படங்களில் இருந்து இதை சற்று வித்தியாசப்படுத்தியும் காட்டுகிறது.
இயக்குநர் சுந்தர்.சி வழக்கம் போல் லாஜிக்குகளை ஓரம் வைத்துவிட்டு, பொழுதுபோக்கு என்ற மேஜிக்கை மிக பிரமாண்டமாக செய்திருக்கிறார். முந்தைய மூன்று அரண்மனை படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று, என்று சொல்லும் வகையில் திரைக்கதை மற்றும் காட்சிகள் அமைந்திருந்தாலும், அதை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் இயக்குநராக சுந்தர்.சி அதிகம் மெனக்கெட்டிருப்பது படம் முழுவதும் தெரிகிறது.
படத்தின் துவக்கம் முதல் இறுதிக் காட்சி வரை பொழுதுபோக்கு ஒன்றை மட்டுமே மனதில் வைத்து படத்தை நகர்த்தி செல்லும் இயக்குநர் சுந்தர்.சி, காட்சிக்கு காட்சி சிறுவர்களை கொண்டாடவும், குலுங்கி குலுங்கி சிரிக்கவும் வைக்கிறார். ஒரு பக்கம் பேயின் மிரட்டல் மறுபக்கம் நட்சத்திரங்களின் நகைச்சுவை விருந்து, என இரண்டையும் அளவாக கொடுத்து குழந்தைகளையும், பெண்களையும் தன்வசப்படுத்தும் இயக்குநர் மொத்த படத்தையும் பிரமாண்டமான முறையில் காட்சிப்படுத்தி சில இடங்களில் சினிமா ரசிகர்களையும் வியப்படைய செய்கிறார்.
படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் தரமாக இருப்பதோடு, சிறுவர்களை கொண்டாடும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமன்னாவுக்கும், மந்திரவாதிக்கும் இடையே நடக்கும் சண்டையில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகளை ‘ஹாரி பார்ட்டர்’ படம் போல் சிறுவர்கள் கொண்டாடுகிறார்கள்.
கோடைக்கால விடுமுறையில் குடும்பமாக பார்ப்பதற்கு சரியான திரைப்படம், குறிப்பாக சிறுவர்கள் கொண்டாடுவதற்கான அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த படமாக உள்ளது இந்த ‘அரண்மனை 4’
ரேட்டிங் 4/5
Comments are closed.