நடிகர்கள் : தமன் குமார், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, ஸ்ரீரஞ்சனி, பழ கருப்பையா, கஜராஜ்
இசை : சஞ்சை மாணிக்கம்
ஒளிப்பதிவு : கே.ஜி.ரத்தீஷ்
இயக்கம் : பி.மணிவர்மன்
தயாரிப்பு : மதுரை அழகர் மூவிஸ் & ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ்
தனது கணவர் எம்.எஸ்.பாஸ்கார் காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கும் ஸ்ரீ ரஞ்சனி, கந்து வட்டி தொழில் செய்யும் வேல ராமமூர்த்தி மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக சொல்கிறார். வழக்கை விசாரிக்க தொடங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகன் தமன் குமார், நேரடியாக வேல ராமமூர்த்தியை ரவுண்டப் செய்ய, அங்கு தொடங்கும் பரபரப்பு படம் முடியும் வரை தொடர்கிறது.
காணாமல் போன எம்.எஸ்.பாஸ்கரை தமன் குமார் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது ஒரு பக்கம் இருக்க, திடீரென்று நிகழும் இளம் பெண் நிகிதாவின் கொலை, அந்த வழக்கையும் கையில் எடுக்கும் தமன் குமாரின் அதிரடி நடவடிக்கைகள் என இரண்டு மணி நேரத்திற்கு ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடுவது தான் ‘ஒரு நொடி’.
மிடுக்கான தோற்றம், பக்குவமான நடிப்பு என்று பரிதி இளம்மாறன் என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமாக இருக்கிறார் தமன் குமார். கடத்தல் மற்றும் கொலை வழக்குகளை அவர் எதிர்கொள்ளும் விதம் மற்றும் எம்.எல்.ஏ, கந்து வட்டி ரவுடி போன்றவர்களை கையாளும் விதங்களை தனது அளவான நடிப்பு மூலம் ரசிக்க வைக்கிறார். தன்னை நிரூபிப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்பை தமன் சரியாக பயன்படுத்தியிருக்கிறார், நிச்சயம் இந்த படம் அவரது சினிமா பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.
கந்து வட்டி தொழில் நடத்துபவராக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, வழக்கமான முறைப்போடு நடித்தாலும், காவல்துறை அதிகாரியிடம் தனது கோபத்தையும், திமிரையும் வெளிப்படுத்தும் விதம் மிரட்டல்.
எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் பழ.கருப்பையாவின் அறிமுகம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், திரைக்கதையோட்டத்திற்கு பயன்படும் ஒரு வேடமாக வந்து போகிறார்.
சேகரன் என்ற வேடத்தில் கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், காணாமல் போகும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், பிளாஸ்பேக்கில் அவ்வபோது தலைகாட்டுபவர் தனது அனுபவமான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
நகை கடையில் வேலை செய்யும் இளம் பெண்ணாக நடித்திருக்கும் நிகிதா, அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் இயல்பு. எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீ ரஞ்சனி உணர்ச்சிகரமாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.
நிகிதாவின் தந்தையாக நடித்திருப்பவரின் நடிப்பு அளவாக இருந்தாலும், அம்மாவாக நடித்திருக்கும் தீபா சங்கர் கொஞ்சம் அதிகமாகவே நடித்திருக்கிறார்.
சலூன் கடைக்காரராக நடித்திருக்கும் விக்னேஷ் ஆதித்யாவின் நடிப்பு சிறப்பு.
ஒளிப்பதிவாளர் கே.ஜி.ரத்தீஷ் தனது கேமரா மூலம் காட்சிகளுக்கு உயிரோட்டம் அளித்திருக்கிறார். குறிப்பாக ஒரே விசயத்தை பல கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தும் காட்சிகளை வித்தியாசமான கோணங்களில் படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.
சஞ்சய் மாணிக்கம் இசையில், சிவசங்கர், ஜெகன் கவிராஜ், உதயா அன்பழகன் ஆகியோரது வரிகளில் பாடல்கள் உணர்வுப்பூர்வமாக அமைந்திருக்கிறது. அளவான பின்னணி இசை காட்சிகளின் பரபரப்பையும், பதற்றத்தையும் ரசிகர்களிடம் சரியான முறையில் கடத்தியிருக்கிறது.
படத்தொகுப்பாளர் எஸ்.குரு சூர்யா, படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே ரசிகர்களை கதைக்குள் அழைத்துச் சென்று விடுவதோடு, அடுத்தடுத்த காட்சிகளை வேகமாக நகர்த்தி சென்றாலும், திரைகக்தையில் இருக்கும் எமோஷ்னலான விசயங்களை மிக அழகாக தொகுத்து படத்தை சுவாரஸ்யமாக பயணிக்க வைத்திருக்கிறார்.
எளிமையான விசயம் என்றாலும், ஒரு நொடியில் இப்படிப்பட்ட விசயங்கள் நடந்துவிடும் என்ற உண்மையை சுவாரஸ்யமான க்ரைம் சஸ்பென் திரில்லர் ஜானர் கதையாக சொல்லியிருக்கும் பி.மணிவர்மன், உணர்வுப்பூர்வமாகவும் சொல்லியிருக்கிறார்.
ஒரு குற்ற வழக்கில் பயணிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர், அந்த வழக்கை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பல திருப்பங்களோடு சொல்வதோடு, இது தான் நடந்திருக்கும், இவர் தான் செய்திருப்பார், என்று ரசிகர்களை யூகிக்க வைத்தாலும், இறுதியில் அத்தனை யூகங்களையும் உடைத்தெறிந்து, யூகிக்க முடியாத ஒரு விசயத்தை சொல்லி படத்தை முடித்திருப்பது பாராட்டத்தக்கது.
மொத்தத்தில், படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை பரபரப்புடன் பயணப்படும் இந்த ‘ஒரு நொடி’ ரசிகர்களுக்கு முழுமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் அனுபவத்தை கொடுக்கிறது.
ரேட்டிங் 4/5