நடிகர்கள் : அர்ஜுன் பிரபாகரன், ஆராத்யா, முனீஷ்காந்த், சரவண சுப்பையா, சுப்பிரமணிய சிவா, சுருளி, காயத்ரி
இசை : ஜீவா
ஒளிப்பதிவு : யுவராஜ்.ஆர்
இயக்கம் : நாராயணன்.பி.ஏ
தயாரிப்பு : எலைட் டாக்கீஸ் – கே.பாஸ்கரன்
ராப் பாடகாராக சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழும் நாயகன் அர்ஜுன் பிரபாகரனும், தனியார் பள்ளி ஆசிரியையான நாயகி ஆராத்யாவும் காதலிக்கிறார்கள். அர்ஜுன் பிரபாகரனின் லட்சியம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு கிடைக்க, அதை சரியாக பயன்படுத்தி பெரிய ராப் பாடகராக உருவெடுக்கிறார். அவருக்கு வாய்ப்பு கொடுத்தவர்களுக்கும், அவர் மூலம் வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கிறது.
இந்த நிலையில், ஆராத்யா பணிபுரியும் பள்ளியில் நடக்கும் மோசடியால் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். பள்ளியில் நடக்கும் மோசடியை ராப் பாடல் மூலம் உலகிற்கு தெரியப்படுத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்ற ஆராத்யாவின் விருப்பத்தை அர்ஜுன் பிரபாகரன் நிறைவேற்ற முடிவு செய்கிறார். ஆனால், அவரது இந்த முயற்சி தங்களது வளர்ச்சியை பாதிக்கும் என்று நினைக்கும் இசை நிறுவனம் அதற்கு முட்டுக்கட்டை போடுவதோடு, அவரை மிரட்டவும் செய்கிறது. மறுபக்கம் தனியார் பள்ளி தலைவர் சுப்பிரமணிய சிவா, ஆராத்யாவை கொலை செய்ய முயற்சி செய்கிறார். இவர்களையும், இவர்கள் மூலம் வரும் பிரச்சனைகளையும் சமாளித்து, தாங்கள் நினைத்ததை காதல் ஜோடி வெற்றிகரமாக செய்து முடித்ததா? இல்லையா?, என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் அர்ஜுன் பிரபாகரன், கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக இருந்தாலும் நடிப்பில் தடுமாறுகிறார். ராப் பாடல் பாடும் போது, தனது நடிப்பு மற்றும் உடல் மொழியில் புத்துணர்ச்சியை வெளிப்படுத்த தவறியிருப்பதால், அவரது நடிப்பும், ராப் பாடலும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
நாயகி ஆரத்யா, அழகு மற்றும் அளவான நடிப்பு என கவர்கிறார். தனது வேலையை குறையின்றி செய்து படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, வழக்கம் போல் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சரவண சுப்பையா, அரசியல்வாதியாக நடித்திருக்கும் முனிஷ்காந்த், சுருளி, காயத்ரி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் யுவராஜ்.ஆர், பொருளாதார கட்டுப்பாட்டினால் காட்சிகளை மிக எளிமையாக படமாக்கியிருந்தாலும், நேரடி லொக்கேஷன்களில் படமாக்கி காட்சிகளின் இயல்பு தன்மையை அதிகரித்திருக்கிறார்.
இசைக்கு முக்கியத்துவம் உள்ள திரைக்கதை என்பதை மறந்து இசையமைத்திருக்கும் ஜீவா, பாடல்களை தனித்துவம் இன்றி கொடுத்திருக்கிறார். ராப் பாடல்களும், அதன் சூழல்களும் தான் கதைக்களம் என்றாலும், இசையில் பார்வையாளர்களை கவரக்கூடிய அம்சங்கள் மிக மிக குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக ராப் பாடல்களுக்கான இசை பார்வையாளர்களை எந்தவிதத்திலும் பாதிக்காதது படத்திற்கு பலவீனம்.
படத்தொகுப்பாளர் காமேஷ்.கே மற்றும் கலை இயக்குநர் இளஞ்செழியன் ஆகியோரது பணி பரவாயில்லை ரகம்.
கல்வி வியாபரமாக்கப்பட்டாலும், கட்டணத்திற்கு ஏற்ப கல்வியும், மாணவர்களுக்கான வசதியும் இருந்தது. ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் கல்வி வியாபாரத்தில் முழுக்க முழுக்க வியாபாரத்தை மட்டுமே பார்க்கும் சில தனியார் பள்ளிகளினால் மாணவர்கள் எதிர்காலம் எப்படி பாழாகிறது என்பதையும், அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் எப்படி கொத்தடிமைகள் போல் நடத்தப்படுகிறார்கள், என்பதையும் தைரியமாக பேசியிருக்கும் இயக்குநர் நாராயணன்.பி.ஏ, இத்தகை சமூகப் பிரச்சனைகளுக்கு கலை என்ற அரசியல் ஆயுதம் மூலம் தீர்வு காண முடியும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
திரைக்கதை சற்று தொய்வாகவும், கதை சொல்லல் மற்றும் மேக்கிங் ஆகியவை சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பது குறையாக இருந்தாலும், இயக்குநர் நாராயணன்.பி.ஏ, எடுத்துக்கொண்ட கதைக்களம் மற்றும் கலையாலும், கலைஞர்களாலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வு பிரசாரத்திற்காக படத்தை ஒரு முறை பார்க்கலாம்.
ரேட்டிங் 3/5