நடிகர்கள் : உன்னி மேனன், தேவநந்தா, ஸ்ரீபாத், மனோஜ் கே.ஜெயன், சஜு குரூப்
இசை : ரஞ்சின் ராஜ்
ஒளிப்பதிவு : விஷ்ணு நாராயணன்
இயக்கம் : விஷ்ணு சசி சங்கர்
தயாரிப்பு : நீத்தா பிண்டோ, பிரியா வேணு
தீவிர ஐயப்ப பக்தையான சிறுமி தேவநந்தாவுக்கு சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க ஆசை. அவரை சபரிமலைக்கு அழைத்து செல்வதாக சொன்ன அவரது தந்தை திடீரென்று இறந்துவிட, சிறுமி தேவனந்தா தனது தோழன் சிறுவன் ஸ்ரீபத்துடன் வீட்டுக்குத் தெரியாமல் சபரிமலைக்கு செல்கிறார். வழியில் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கும் சிறுமி, தன்னை ஐயப்பன் காப்பாற்றுவார், என்று நம்புகிறார். அவரது நம்பிக்கையை ஐயப்பன் காப்பாற்றினரா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘மாளிகப்புரம்’.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் சிறுமி வேவனந்தா, வெள்ளந்தி சிரிப்புடன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற கச்சிதமான நடிப்பை கொடுத்திருக்கிறார். சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தும் இடத்திலும், சபரிமலைக்கு போகும் வழியில் ஆபத்தில் சிக்கும் காட்சிகளிலும் அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் கைதட்டல் பெறுகிறது.
சிறுமியின் நண்பனாக நடித்திருக்கும் சிறுவன் ஸ்ரீபத், வயதுக்கு வேகத்தோடு நடித்து கவனம் பெறுகிறார்.
நாயகன் உன்னி முகுந்தனின் எண்ட்ரியும், அவரது நடிப்பு, சண்டைக்காட்சி என அனைத்தும் சாகசமாகவும், வியப்பாகவும் இருக்கிறது. உன்னி முகந்தன் யார்? என்ற கேள்வியோடு அவர் செய்யும் சாகசங்கள் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி செல்ல, இறுதியில் அவர் யார்? என்பதை சொல்லியிருப்பது கதைக்கு நியாயம் சேர்த்துள்ளது.
முக்கிய வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் சம்பத் ராஜ், தனது கதாபாத்திரம் மீது கோபம் வரும்படி கொடூரமான வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார். பல இடங்களில் பார்வையினாலேயே பயமுறுத்தும் சம்பத் ராமின் நடிப்பு மிரட்டல்.
சிறுமியின் தந்தையாக நடித்திருக்கும் சைஜு குரூப், ஆரம்பத்தில் சிரிக்க வைத்தாலும் அவரது முடிவு சோகத்தை கொடுக்கிறது.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் மனோஜ் கே.ஜெயன் ஒரு காட்சியில் வந்தாலும் கவனம் பெறுகிறார்.
விஷ்ணு நாராயணைன் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப அமைந்துள்ளது. ரஞ்சன் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
கதை எழுதி இயக்கியிருக்கும் விஷ்ணு சசி சங்கர், கடவுள் மனித ரூபத்தில் தான் வரும் என்ற கருவை வைத்துக்கொண்டு ஒரு பக்தி படத்தை தற்போதைய காலக்கட்ட எதார்த்த வாழ்க்கையோடு சேர்த்து விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்.
கடவுள் பக்தி இருக்கலாம் தப்பில்லை அதே சமயம் உழைப்பு மட்டுமே ஒருவனை உயர்த்தும் என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கும் இயக்குநர் இறுதியில் மனிதம் தான் கடவுள் என்று சொல்லியிருப்பது பாராட்டும்படி உள்ளது.
ரேட்டிங் 3.5/5