‘அமீகோ கேரேஜ்’ விமர்சனம்

157

நடிகர்கள் : மாஸ்டர் மகேந்திரன், ஜி.எம்.குமார், ஆதிரா, மதனகோபால், சக்தி கோபால், முரளிகமல், சிரிகோ உதயா
இசை : பாலமுரளி பாலு
ஒளிப்பதிவு : விஜய்குமார் சோலைமுத்து
இயக்கம் : பிரசாந்த் நாகராஜன்
தயாரிப்பு : முரளி ஸ்ரீனிவாசன்

ஜி.எம்.சுந்தர் நடத்தி வரும் ‘அமீகோ கேரேஜ்’ என்ற கார் மெக்கானிக் ஷெட்டில் இளைஞரக்ள் ஆட்டம், பாட்டம் என்று மகிழ்ச்சியாக இருப்பதால், நாயகன் மாஸ்டர் மகேந்திரன் பள்ளி பருவத்தில் இருந்தே அதற்குள் நுழைய வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், அங்கு சில சட்டவிரோத செயல்கள் நடப்பதால் அங்கு செல்வதை பெற்றோர்கள் கண்டிக்கிறார்கள். இதற்கிடையே சந்தர்ப்ப சூழ்நிலையால் அமீகோ கேரேஜ்க்குள் நுழையும் மாஸ்டர் மகேந்திரன், ஜி.எம்.சுந்தருடன் பழக தொடங்குகிறது.

பள்ளி, கல்லூரி என்று படிப்பை முடித்து அப்பா சொன்ன வேலைக்கு செல்பவர், அப்படியே அமீகோ கேரேஜுக்கு செல்வதும், ஜி.எம்.குமாருடன் பழகுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் நிலையில், சிறு அடிதடி பிரச்சனையில் சிக்குகிறார். அந்த பிரச்சனையில் இருந்து அவரை காப்பாற்ற ஜி.எம்.குமார் உதவி செய்ய, அதோடு நிற்காமல் அந்த பிரச்சனை மாஸ்டர் மகேந்திரனின் உயிருக்கே உலைவிக்கும் அளவுக்கு வளர்ந்துவிடுகிறது. உயிருக்கு பயந்து வீட்டுக்கு செல்லாமல் தலைமறைவாக இருக்கும் மாஸ்டர் மகேந்திரன், இதில் இருந்து விடுபடுவதற்காக பெரிய முடிவு ஒன்றை எடுக்கிறார். அதனால் அவரது வாழ்க்கை எப்படி திசைமாறிப்போகிறது என்பதை சொவ்லது தான் ‘அமீகோ கேரேஜ்’ படத்தின் மீதிக்கதை.

முதல் முறையாக ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன், நடிப்போடு ஆக்‌ஷனிலும் அட்டகாசம் செய்திருக்கிறார். பள்ளி மாணவராக இருக்கும் போது கல்லூரி பெண்ணை காதலிக்கும் காட்சிகளில் ரசிகர்களை கலகலப்பாக்குபவர், ஆக்‌ஷன் காட்சிகளில் அதிகமாக மெனக்கெட்டு அசத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஆதிரா, குடும்ப பாங்கான முகத்தோடும், அழகோடும் கவர்கிறார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அவரது வேடத்திற்கு வேலை இல்லாதது பெரும் ஏமாற்றம்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜி.எம்.குமார் எதார்த்தமான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருப்பதோடு, படத்தின் திருப்புமுனை வேடமாக முக்கிய பங்கு வகிக்கிறார்.

மதனகோபால், சக்தி கோபால், முரளிகமல், சிரிகோ உதயா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

விஜய்குமார் சோலைமுத்துவின் ஒளிப்பதிவு படத்தை ஆக்‌ஷன் உணர்வோடு நகர்த்தி செல்லும்படி காட்சிகளை படமாக்கியிருக்கிறது. படத்திற்கு பலம் சேர்க்கும் ஆக்‌ஷன் காட்சிகளை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருப்பவர் இரவு நேர காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க வைப்பதோடு, முனுமுனுக்கவும் வைக்கிறது. பின்னணி இசையும் அளவு.

புதுமையான முயற்சிகள் எதையும் எடுக்கவில்லை என்றாலும், வழக்கமான ஆக்‌ஷன் கதையை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் பிரசாந்த் நாகராஜன், அனைத்து தரப்பினரும் பார்க்கும் விதமாக செண்டிமெண்ட், காதல், நட்பு, துரோகம் என அனைத்து உணர்வுகளையும் அளவாக கையாண்டு முழுமையான கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார்.

ரேட்டிங் 3/5

Comments are closed.