‘சவரக்கத்தி’க்காக பூர்ணாவை புதிதாக மாற்றிய மிஷ்கின்..!

194

poorna-in-savarakathi

இரண்டு குழந்தைகளுக்கு தாய்.. வயிற்றில்வேறு ஒரு குழந்தை.. இந்த கேரக்டரில் நடிக்க இன்றைய இளம் நடிகைகள் எவரேனும் சம்மதிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்.. நமக்கே தெரியும் மாட்டார்கள் என்பது.. இரண்டு குழந்தைகளுக்கு தாயாக அடிக்க முன் வந்தாலும் கூட, வயிற்றை தூக்கிக்கொண்டு கர்ப்பிணியாக நடிக்கணும் என்றால் சான்சே இல்லை..

தான் தயாரித்து நடிக்கும் ‘சவரக்கத்தி’ படத்திற்காக நான்கைந்து ஹீரோயின்களை தேடி கதைசொல்லி, அவர்களும் ஆர்வமுடன் மிஷ்கின் படம் என கதையெல்லாம் கேட்டு, அதன்பின் கர்ப்பிணியா, அதிலும் ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு தாயா என ஜெர்க்காகி, புன்முறுவலுடன் ‘ஸாரி சார்’ என மறுத்தபிறகுதான் நிலைமையின் தீவிரம் இயக்குனர் மிஷ்கினுக்கு புரிய ஆரம்பித்தது..

மிஷ்கினின் தம்பி ஆதித்யா இயக்குனராக அறிமுகமாகும் படம் வேறு.. கதாநாயகனாக தங்கமீன்கள் இயக்குனர் ராமையும் வில்லனாக தன்னையும் தயார்படுத்திக்கொண்ட மிஷ்கினுக்கு கதாநாயகி தேடல் சவாலாகவே இருந்தது. ஆனால் அது ‘குட்டி அசின்’ என விஜய்யால் செல்லமாக பட்டம் சூட்டப்பட்ட பூர்ணாவை பார்க்கும்வரை தான்.. கதை கேட்டதும் எந்த மறுப்பும் சொல்லாமல் ஒப்புக்கொண்ட பூர்ணா படப்பிடிப்பு முடியும்வரை அந்த கேரக்டராகவே மாறிப்போய்விட்டார்..

பூர்ணாவின் இந்த அர்ப்பணிப்பு உணர்வுதான், ‘சவரக்கத்தி’ இசைவெளியீட்டு விழாவில் மிஸ்கினின் புகழாரமாக வெளிப்பட்டது. பூர்ணா மலையாள நடிகைதான்.. படத்தில் தனது கேரக்டரின் மேல் அவருக்கு ஏற்பட்ட ஈடுபாட்டால் தானே டப்பிங் பேசுவதாக கூற,மலையாளிப்பெண்ணை, பயிற்சி கொடுத்து அழகு தமிழில் பேசவைத்துள்ளார் மிஷ்கின்..

ஒரு நடிகை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் பூர்ணா என மிஷ்கின் பொதுமேடையில் கூறியபோது வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றது போல உணர்ந்திருப்பார் பூர்ணா.. அதுதான் பூர்ணா பேசும்போது அவரையறியாமல் மேடையிலேயே கண்கலங்க வைத்ததும் கூட.

Comments are closed.