நெல் ஜெயராமனை மருத்துவமனையில் நலம் விசாரித்த கார்த்தி..!

223

nel jeyaraman-karthi

விவசாயிகள் வட்டாரத்தில் நெல் ஜெயராமன் என்பவரை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தான் பிறந்த ஆதிரெங்கம் கிராமத்தில் பிறந்தவர் இவர்.

பல லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்க்கை சாகுபடி முறையில் ஈடுபட வைத்து உற்பத்தியை பெருக்கி சந்தைப்படுத்தியதின் மூலம் உலகத்தின் பார்வையை காவிரி டெல்டாவின் பக்கம் திரும்ப செய்த பெருமைக்கு சொந்தக்காரர். இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலும் நெல் திருவிழா நடத்தும் பேரியக்கத்தை உருவாக்கிய சிற்பி.

வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் வழி தோன்றலாய் இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி யானைக்கவுனி, கருங்குருனை, உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பண்டைகால பாரம்பறிய நெல் வகைகளை கண்டறிந்து அதனை தனது பன்னையில் விளைவித்து வந்தார்.

ஆண்டுக்கொரு முறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்து பல்வேறு ஆய்வாளர்கள் பங்கேற்க செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளித்து விழிப்புணர்வையும், ஏற்படுத்தி வந்தார்..

நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு 1 கிலோ பாரம்பறிய நெல் விதைகளை இலவசமாக வழங்கி, அதனை பெற்று செல்லும் விவசாயிகள் தனது நிலத்தில் விதைத்து இயற்க்கை தொழில் நுட்ப முறையில் சாகுபடி செய்து மறு ஆண்டு நெல் திருவிழாவின் போது 4 கிலோவாக இலவசமாகவே திரும்ப பெற்று அதனை புதிய 4 விவசாயிகளுக்கு இலவசமாகவே சுழற்சி முறையில் வழங்கி வந்தார்.

இதன் மூலம் உணவே நஞ்சாகிப் போன உலகில் தனது அர்ப்பணிப்பு மிக்க செயல்பாட்டால் நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்து மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாரம்பரிய உணவு முறைக்கு மாற்றிக்காட்டிய பெருமகன் ஆவார். இவரது சேவையை பாராட்டி குடியரசு தலைவர் விருது, மற்றும் தமிழக அரசு, கோவை வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயரிய அமைப்புகள் பல விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 1 1/2 ஆண்டு காலமாக கடும் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளான ஜெயராமன் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலும், தனது விழிப்புணர்வு பயணத்தை துணிவோடும் நம்பிக்கையுடன் தொடர்ந்தார்.

சாதாரண ஏழை விவசாயி மகனாக பிறந்து தனது சிறு வயதிலேயே தந்தையை இழந்து ஏழ்மை வாழ்க்கை நிலையிலேயே தனது அர்ப்பனிப்பு மிக்க சேவையை தொடர்வதை உணர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட கலைஞர்கள், சேவையாளர்கள், நண்பர்கள், விவசாயிகள் மற்றும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் தமிழர்கள் என பலரும் நேரில் சந்தித்தும், நிதி அளித்தும் உதவியதால் அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட மேலை நாடுகளின் மருத்துவ சிகிச்சைக்கு இணையான சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தான் நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் வெற்றி விழாவில் நெல் ஜெயராமனை அழைத்து கௌரவப்படுத்தியவர் தான் நடிகர் கார்த்தி. இந்தநிலையில் சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் இவரை கார்த்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை நம்பிக்கையளிக்கிறது என கூறியுள்ள கார்த்தி, இதனை தங்களோடு பகிர்ந்து கொள்வதின் மூலம் அனைவரின் பிரார்த்தனைகளும் ஜெயராமன் நோயிலிருந்து மீண்டு வர வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் காத்திருப்போம் என நம்பிக்கையும் நெகிழ்ச்சியுமாக குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.