கர்ப்பிணி பெண்களை கௌரவிக்கும் மலையாள சினிமா

172

இது கர்ப்பிணிப்பெண்களைப் பற்றிய படங்களாக வெளிவரும் சீசன் என்றுதான் சொல்லவேண்டும். இந்தியில் வித்யாபாலன் நடித்த கஹானி படத்தில் இருந்துதான் இது ஆரம்பித்தது. கஹானி படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக நடித்திருந்தார் வித்யாபாலன்.

நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருத்தி, தனது கணவரைத் தேடுவது போல முழுக்க முழுக்க நாயகியை முன்னிலைப்படுத்தியே கதை அமைந்து இருக்கும். ‘கஹானி’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2012ம் ஆண்டின் சிறந்த நடிகை பிலிம்ஃபேர் விருதினை வென்றார் வித்யாபாலன். இப்போது கஹானியின் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா நடித்துவருகிறார்.

கஹானியை தொடர்ந்து மலையாளத்தில் ஸ்வேதா மேனன் நடிப்பில் களிமண்னு என்ற படம் வெளியானது. இந்தப்படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக ஸ்வேதா மேனன் நடித்திருந்தார். ப்ளஸ்ஸி இயக்கிய இந்தப்படத்தில் ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவக்காட்சியை படமாக்கி, படத்தில் இணைத்திருந்தார்கள். இது கேரளாவில் மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தும் அளவுக்கு கொண்டு சென்றது.

தற்போது மலையாளத்தில் இன்னும் இரண்டு படங்கள் கர்ப்பிணிப்பெண்களை மையப்படுத்தி தயாராகி வருகின்றன. அதில் ஒன்றுதான் ‘சச்சாரியாயுடே கர்ப்பிணிகள்’. இந்தப்படத்தின் கதை ஐந்து கர்ப்பிணிகளையும் அவர்களுக்கு ட்ரீட்மெண்ட் அளிக்கும் ஒரு மகப்பேறு மருத்துவரையும் சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறதாம். டாக்டராக நடித்திருக்கிறார் இயக்குனரும் வில்லன் நடிகருமான லால். கர்ப்பிணிகளாக ரீமா கல்லிங்கல், ஆஷா சரத், சனுஷா, கீதா, சாண்ட்ரா ஆகிய ஐந்து பேர்களும் நடித்திருக்கிறார்கள்.

அதேமாதிரி மலையாளத்தில் தயாராகிவரும் கொந்தாயும் பூணூலும் என்ற படமும் கர்ப்பிணிப்பெண்ணை பற்றிய கதைதானாம். இந்தப்படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக நடிக்கிறார் பாமா. இவர் தமிழில் எல்லாம் அவன் செயல், சேவற்கொடி ஆகிய படங்களில் நடித்தவர்தான்.

கடந்தவாரம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் தேங்க்யூ என்ற மலையாள படத்தில் கூட நடிகை ஹனிரோஸ் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்திருந்தார். மலையாள சினிமாவில் கர்ப்பிணிகளை மையப்படுத்தி கதை பன்னுவது இப்போது ஒரு ட்ரெண்ட்டாகவே மாறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.