நவீன தொழில்நுட்பத்தில் மீண்டும் தமிழில் ‘சங்கராபரணம்’..!

230


நூற்றாண்டு விழா கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்திய சினிமாவின் புகழை உலக அரங்கில் பறைசாற்றிய படங்களில் முக்கியமான படம் தான் ‘சங்கராபரணம்’’’. சுமார் 36 வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி ஓராண்டு தொடர்ந்து ஓடி வெற்றி பெற்றதுடன், தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வசூல் சாதனை புரிந்து நான்கு தேசிய விருதுகளையும் வாங்கி குவித்தது.

ஒரே நேரடி தெலுங்கு படமான ‘சங்கராபரணம்’ தமிழ்நாட்டில் அள்ளிக்குவித்த வசூல் அப்போது இந்திய திரையுலகையே திரும்பிப்பார்க்க வைத்தது. தற்போது இந்தப்படம் டி.டி.எஸ் மற்றும் டிஜிட்டல் என இன்றைய நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப்படத்தை பிரபல இயக்குனர் கே.விஸ்வநாத் இயக்கியிருந்தார். பரத நாட்டியத்தையும், இசையையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்தக்கதையில் ஆபாசம், வன்முறை என எதுவுமில்லாமல் உணர்வுகளை தட்டி எழுப்பி படம் பார்ப்பவர்கள் அனைவரையும், அதுவும் மொழி புரியாதவர்களையும் கூட  அழவைத்தது.

சோமையாஜுலு, மஞ்சுபார்கவி, ராஜலட்சுமி, துளசி, சந்திரமோகன், அல்லு ராமலிங்கய்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் மறைந்த ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா. இந்தப்படத்திற்கு இசையமைத்தவர் இசை மாமேதை கே.வி.மகாதேவன்.

இந்தப்படத்தில் இடம்பெற்றிருந்த 12 பாடல்களும் நவீன தொழில்நுட்பத்துடன் அதேசமயம் மாறாத இசையுடன் உருவாக்கி இருகின்றன. 36 வருடங்களுக்கு முன் அந்த ‘சங்கராபரணம்’ படத்தில் பாடிய எஸ்.பி.பி, ஜானகி, வாணி ஜெயராம் மூவரும் இந்தப்படத்தில் பாடியுள்ளனர். அதிலும் ஏஸ்.பி.பி இந்தப்படத்திற்காக பாடும்பொழுது கண்கலங்கி அழுதே விட்டாராம். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.

Comments are closed.