’பைக்கர்’ விமர்சனம்

13

நடிகர்கள் : சர்வானந்த், ராஜசேகர், மாள்விகா நாயர், அதுல் குல்கர்னி
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு : ஜெய்.யுவ்ராஜ்
இயக்கம் : அபிலாஷ் ரெட்டி
தயாரிப்பு : யுவி கிரியேஷன்ஸ் – வி.வம்சி கிருஷ்ண ரெட்டி, பிரமோத் உப்பலபட்டி

தந்தை ராஜசேகர் போல் தானும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக வேண்டும் என்று சர்வானந்த் விரும்புகிறார். அவரது விருப்பம் மற்றும் ஈடுபாட்டை பார்த்து அவரது குருவான தந்தை ராஜசேகர் இத்துறையில் அவர் மிகப்பெரிய சாதனையாளராக வருவார் என்று நம்புகிறார். சர்வானந்தும் இத்துறையில் யாரிடமும் இல்லாத தனித்திறன்களோடு வலம் வருகிறார்.

ராஜசேகர் எதிர்பார்த்தது போல், இந்திய மோட்டார் சைக்கிள் பந்தய விளையாட்டை தன் மகன் மூலமாக உலக அரங்கில் எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. தான் நினைத்ததை தன் மகன் செய்து முடிப்பான் என்ற அதீத நம்பிக்கையோடு இருக்கும் ராஜசேகரை சர்வானந்த் ஏமாற்றி விடுகிறார். முதல் பந்தயம் முடிந்த உடன் அவர், பந்தயத்தில் இருந்தும், தனது தந்தையிடம் இருந்தும் விலகிச் சென்று விடுகிறார்.

மகன் செய்த தவறால் ராஜசேகர் தண்டிக்கப்படுவதோடு, அவருக்கு மோசடி நபர் மற்றும் துரோகி என்ற அவப்பெயர் ஏற்படுகிறது. இதனால், அவர் மோட்டார் சைக்கிள் பந்தய பயிற்சியாளர் பணியை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. தந்தையிடம் இருந்து விலகி வாழ்ந்து வரும் சர்வானந்த், தந்தையின் நிலை அறிந்து அதை மாற்றுவதற்காக மீண்டும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக களம் இறங்க முடிவு செய்கிறார். அவரது முடிவு அவரது தந்தையின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி, அவரது எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா?, அவர் தந்தையை பிரிந்து செல்ல காரணம் என்ன ? என்பதை காட்சி விருந்தாக சொல்வது தான் ‘பைக்கர்’.

மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் கதாபாத்திரத்திற்காக சர்வானந்த் கடுமையாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. இரண்டு விதமான தோற்றங்களுக்காக உடல் எடை குறைத்திருப்பது, ஸ்டைலிஷான தோற்றம் உள்ளிட்ட அனைத்திலும் ஒரு முழுமையான விளையாட்டு வீரராக திரையில் ஜொலிக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மாள்விகா நாயர், காதலியாக இருக்கும் போது சாகசம் செய்யும் காதலனை ஊக்கப்படுத்தி தைரியம் சொல்பவர், கணவரான பிறகு ஒரு மனைவியாக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இருக்கும் ஆபத்தை உணர்ந்து பதறும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்திருப்பவர், பாடல் காட்சியில் ஆடை குறைப்புடன் ஆட்டம் போட்டு அட்டகாசம் செய்திருக்கிறார்.

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் ராஜசேகர், இந்திய மோட்டார் சைக்கிள் பந்தய விளையாட்டை உலக அரங்கில் எடுத்துச் செல்ல துடிக்கும் ஒரு பயிற்சியாளராக நேர்த்தியாக நடித்திருக்கிறார். ஹீரோவுக்கு இணையான அவரது கதாபாத்திர வடிமைப்பு மற்றும் அதில் அவர் வெளிப்படுத்திய அளவான நடிப்பு படத்தை தூணாக தாங்கிப் பிடிக்கிறது.

விளையாட்டை வியாபரமாக்கி சம்பாதிக்கும் தொழிலதிபர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார் அத்துல் குல்கர்னி.

கேமராவுக்கு பின்னால் இருப்பவர்களின் கடின உழைப்பினால் ஒரு திரைப்படம் உருவானாலும், கேமரா முன்பு பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் அவர்களது உழைப்பை மறைத்து விடுவார்கள். ஆனால், சில படங்கள் அதற்கு விதிவிளக்காக இருக்கும். அப்படிப்பட்ட படமாக, தொழில்நுட்ப கலைஞர்களை உண்மையான ஹீரோக்களாக பிகாசிக்க வைத்திருக்கிறது இந்த படம்.

ஒளிப்பதிவாளர் ஜெ.யுவராஜ், இசையமைப்பாளர் ஜிப்ரான், படத்தொகுப்பாளர் அனில் குமார் பலாசா மற்றும் இவர்களை ஒருங்கிணைத்து வேலை வாங்கிய இயக்குநர் அபிலாஷ் ரெட்டி ஆகியோரின் அபாரமான உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் பந்தயம் மூலம் அவர்கள் படைத்திருக்கும் காட்சி விருந்து வியக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஜெ.யுவராஜ், எத்தனை கேமராக்கள் மூலம் பந்தய காட்சிகளை படமாக்கினார் என்பது தெரியவில்லை, ஆனால், ஒவ்வொரு கோணத்திற்கும் அவர் கடினமாக உழைத்திருப்பதை காட்சிகள் உணர்த்துகிறது. பந்த காட்சியை மிரட்டலாக காட்சிப்படுத்தியிருப்பவர், பாடல் காட்சியை கலர்புல்லாக படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார். நாயகன் சர்வானந்தை ஒரு நிஜ மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக காண்பித்ததோடு, கதைக்களத்தையே வேறு ஒரு வடிவத்தில் காட்டி, இது வழக்கமான படம் அல்ல என்பதை காட்சிக்கு காட்சி நிரூபித்திருக்கிறார்.

கமர்ஷியல் அம்சங்களோடு பாடல்களை கொடுத்து கவர்துவிடும் இசையமைப்பாளர் ஜிப்ரான், பின்னணி இசை மூலம் பிரமிக்க வைத்திருக்கிறார். ஆபத்து மிக்க பந்தய காட்சிகளுக்காக அவர் போட்டிருக்கும் பின்னணி இசை தனித்துவத்தோடு பயணிப்பதோடு, அந்த காட்சிகளின் தரம் மற்றும் கடினமான உழைப்பை படம் பார்ப்பவர்கள் உணரச் செய்கிறது.

பல கேமராக்கள் மூலம் காட்சிகளை படமாக்கி, அதற்கு இசை மூலம் உயீரூட்டினாலும், அவற்றை சரியான முறையில் தொகுத்து, பார்வையாளர்களை வியக்க வைக்கும் ஒரு பந்தயமாக கொடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் அனில் குமார் பலாசா. விளையாட்டை மையப்படுத்திய படங்களுக்கு என்று இருக்கும் பாணியில் கதை பயணித்தாலும், அதை நான் லீனர் முறையில் சொல்லி திரைக்கதையை தொய்வின்றி நகர்த்தி செல்லும் படத்தொகுப்பாளர், பந்தய காட்சிகளை மிக நேர்த்தியாக தொகுத்து பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறார்.

அபிலாஷ் ரெட்டி, எம்.வி.எஸ்.பரத்வாஜ், ஷ்ரவன் மடலா ஆகியோரது கதை மற்றும் திரைக்கதை, ஆபத்து நிறைந்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தை மையப்படுத்தியதாக இருந்தாலும், அதை குடும்ப பின்னணியோடு சொன்ன விதம், அந்த விளையாட்டின் மீதான குடும்ப நபர்களுக்கு இருக்கும் அச்சம், மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் அதில் பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் பற்றிய நுணுக்கங்கள் என அனைத்தையும் மிக நேர்த்தியாக கையாண்டிருகிறது.

ஒரு விசயத்தை பிரமாண்டமாகவும், தத்ரூபமாகவும் கற்பனை செய்வது சுலபம், ஆனால் அந்த கற்பனைக்கு காட்சி வடிவம் கொடுத்து அதை திரையில் கொண்டு வருவது மிக சவலான விசயம். அந்த சவாலை மிக சாமர்த்தியமாக செய்து காண்பித்திருக்கிறார் இயக்குநர் அபிலாஷ் ரெட்டி.

படத்தில் இடம்பெறும் அனைத்து பந்தயங்களும் பார்வையாளர்களை கவர்ந்து இருக்கையின் நுணியில் உட்கார வைக்கிறது. அதிலும், கிளைமாக்ஸ் பந்தய காட்சியும், அதில் பைக்கர்களின் ஆபத்து நிறைந்த பயணமும் மிரட்சியை ஏற்படுத்தும் விதத்தில் இருப்பது படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

திரைக்கதை ஓட்டத்தின் சில இடங்களில் சிறு சிறு தொய்வு ஏற்பட்டாலும், கதைக்களம் மற்றும் காட்சிகளை கையாண்ட விதம் மூலம் அந்த தொய்வுகளில் இருந்து படத்தை எளிதில் மீட்டெடுக்கும் இயக்குநர் அபிலாஷ் ரெட்டி, இந்த ‘பைக்கர்’ மூலம் ரசிகர்களுக்கு காட்சி விருந்து படைத்திருக்கிறார்.

ரேட்டிங் 4/5

Comments are closed.