‘வருணன்’ விமர்சனம்

314

நடிகர்கள் : ராதாரவி, சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரில்லா, ஹரிபிரியா, சங்கர்நாக் விஜயன், பிரியதர்ஷன், ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன், ஹைட் கார்த்தி, கெளசிக், கிரண்மயி
இசை : போபோ சசி
ஒளிப்பதிவு : எஸ்.ஸ்ரீராம் சந்தோஷ்
இயக்கம் : ஜெயவேல் முருகன்
தயாரிப்பு : யாக்கை பிலிம்ஸ் – கார்த்திக் ஸ்ரீதரன்

சென்னை, ராயபுரம் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் இரண்டு தரப்பினருக்கும் இடையே தொழில் ரீதியான போட்டி ஏற்படுகிறது. நிறுவனத்தின் உரிமையாளர்கள் மோதல் இல்லாமல் தொழில் செய்து வந்தாலும், அவர்களிடம் வேலை செய்யும் இளைஞர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுகிறார்கள். மறுப்பக்கம் காவல்துறை அதிகாரி தண்ணீர் கேன் நிறுவனத்தில் முதலீடு செய்து சம்பாதிக்க முயற்சிக்கிறார். இதன் காரணமாக, இரு தரப்பினருக்குமான தொழில் போட்டி, பெரும் பகையாக உருவெடுக்க, அதனால் அவர்களது வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை சொல்வதே ‘வருணன்’.

தண்ணீர் கேன் நிறுவனம் நடத்துபவர்களாக நடித்திருக்கும் ராதாரவி மற்றும் சரண்ராஜ் அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு அடையாளமாக பயணித்திருக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் கேப்ரில்லா கதாபாத்திரத்திற்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். மற்றொரு நாயகன், நாயகியாக நடித்திருக்கும் பிரியதர்ஷன் மற்றும் ஹரிபிரியா ஜோடிக்கும் வழக்கமான வேலை தான் என்றாலும் அதை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

வில்லனாக நடித்திருக்கும் சங்கர்நாக் விஜயன் கவனம் ஈர்க்கும்படி வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன், ஹைட் கார்த்தி, கெளசிக், கிரண்மயி என அனைவரும் திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், லைவ் லொக்கேஷன்களில் கேமராவை சுழல வைத்து காட்சிகளை வேகமாக பயணிக்க் வைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை படமாக்கி விதம் வியக்க வைக்கிறது.

இசையமைப்பாளர் போபோ சசியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்தாலும், சில இடங்களில் கொஞ்சம் ஓவராக பில்டப் கொடுத்திருக்கிறது.

என்.ரமணா கோபிநாத்தின் வசனத்தில் இருக்கும் ஆக்ரோஷமும், பில்டப்பும் திரைக்கதையில் இல்லை.

எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஜெயவேல் முருகன், தண்ணீர் கேன் தொழிலை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருப்பதாக சொல்லிவிட்டு, அதைப்பற்றி எந்த ஒரு தகவலையும் படத்தில் வைக்காமல், தண்ணீர் கேன் போடும் இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்படும் காதல், திருமணம், அதைச்சார்ந்து வரும் மோதல் என்று வழக்கமான கமர்ஷியல் ஆக்‌ஷன் மசாலா படத்தை தான் கொடுத்திருக்கிறார்.

ரேட்டிங் 2/5

Comments are closed.