’ராபர்’ விமர்சனம்

160

நடிகர்கள் : சத்யா, டேனியல் போப், ஜெயப்பிரகாஷ், தீபா சங்கர், ஸ்டில்ஸ் பாண்டியன்
இசை : ஜோகன் செவனேஷ்
ஒளிப்பதிவு : என்.எஸ்.உதயகுமார்
இயக்கம் : எஸ்.எம்.பாண்டி
தயாரிப்பு : இம்பிரஸ் பிலிம் புரொடக்‌ஷன்ஸ் & மெட்ரோ புரொடக்‌ஷன்ஸ் – கவிதா.எஸ் & அனந்த கிருஷ்ணன்

படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கிடைத்த வேலையை செய்துக் கொண்டிருக்கும் நாயகன் சத்யாவுக்கு, சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை வருகிறது. அதற்காக வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பவர், கொலை செய்யவும் துணிகிறார். இதனால், தொழில் ரீதியான எதிரிகள் அவரை துரத்த, மறுபக்கம் பாதிக்கப்பட்டவர்கள் பழி தீர்க்க அவரை விரட்டுகிறார்கள். இவர்களிடம் இருந்து நாயகன் சத்யா தப்பித்து தனது குற்ற செயல்களை தொடர்ந்தாரா? இல்லையா ? என்பது தான் ‘ராபர்’ கதை.

நாயகனாக நடித்திருக்கும் சத்யாவுக்கு இந்த வேடம் புதிதல்ல என்பதால் தனது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். அப்பாவித்தனமான முகத்தோடும், அளவான பேச்சோடும் பயணித்திருப்பவர், குற்ற செயல்களில் ஈடுபடும் போது படம் பார்ப்பவர்களையும் பதற வைத்துவிடுகிறார்.

வில்லன் அவதாரம் எடுத்திருக்கும் டேனியல் போப், மிரட்டவில்லை என்றாலும் சொதப்பாமல் நடித்திருக்கிறார்.

சிறையில் கெத்தாக எண்ட்ரிக் கொடுத்து இறுதியில் வெத்தாக முடியும் செண்ட்ராயனின் கதாபாத்திரமும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் படத்திற்கு சிறப்பு சேர்த்திருப்பதோடு, பார்வையாளர்களை சிரிக்கவும் வைக்கிறது.

ஜெயப்பிரகாஷ், தீபா சங்கர், ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமார், இசையமைப்பாளர் ஜோகன் செவனேஷ், படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.என்.பி ஆகியோரது பணிகள் நேர்த்தி.

’மெட்ரோ’ படத்தை இயக்கிய அனந்த கிருஷ்ணனின் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் எஸ்.எம்.பாண்டி, ‘மெட்ரோ’ படத்தில் நாம் பார்த்த சில சம்பவங்களை போலவே இதிலும் காட்சிகளை வடிவமைத்து இயக்கியிருப்பதால் படம் திரையிலும் சரி, பார்வையாளர்களிடமும் சரி எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் வரும் நபர்களிடம் வழிப்பறி மற்றும் செயின் பறிப்புகளில் ஈடுபடுவது சரி, ஆனால் படத்தின் பெரும்பாலான காட்சிகள் அப்படிப்பட்ட இடங்களில் மட்டுமே நடப்பது போல் காட்டியிருக்கும் இயக்குநர் எஸ்.எம்.பாண்டி, ஏற்கனவே வெளியான ஒரு படத்தின் சில காட்சிகளை வைத்துக் கொண்டு அதே பாணியில், ஒரு படத்தை கொடுத்திருக்கிறாரே தவிர புதிதாக வேறு எதையும் சொல்லவில்லை.

ரேட்டிங் 2/5

Comments are closed.