நடிகர்கள் : விஷ்வா, சுபா, சாய் தன்யா, ஹரிதா ஸ்ரீ, இலக்கியா, சாய் ரோகினி, காதல் சரவணன், தினேஷ், பிர்லா போஸ், ஷர்மிளா, கோவை குருமூர்த்தி
இசை : சரண்குமார்
ஒளிப்பதிவு : சுகுமாரன் சுந்தர்
இயக்கம் : சந்துரு முருகானந்தம்
தயாரிப்பு : கிராக்பிரய்ன் புரொடக்ஷன்ஸ்
ஒரு பெண் காணாமல் போகிறார், அவரை தேடி செல்லும் போலீஸ் இரு பெண்கள் கொலை செய்யப்பட்டதை கண்டுபிடிக்கிறார்கள். கொலைகளின் பின்னணி என்ன? , காணாமல் போன பெண்ணை போலீஸ் கண்டுபிடித்ததா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
வழக்கமான க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் கதை என்றாலும், கதையின் மையக்கருவாக வைக்கப்பட்டிருக்கும் விஷயம் புதிதாகவும், யூகிக்க முடியாதபடியும் இருப்பது படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறது.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் விஷ்வா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் சுபா இருவரும் கொலை சம்பவத்தை விசாரணை செய்யும் விதம் இயல்பாக இருக்கிறது. குறிப்பாக விஷ்வா எந்தவித அலட்டலும், ஆர்பாட்டமும் இல்லாமல் நடித்திருக்கிறார். அவருக்கு எதிர்மறையாக எப்போதும் பரபரப்பாகவும், விரைப்பாகவும் இருக்கும் சுபாவின் கதாப்பாத்திரமும் கவனம் பெறுகிறது.
மனநலம் பாதிக்கப்பட்டவராக வரும் சாய் தன்யா, படத்தின் தொடக்கத்தில் இருந்தே நம்மை எதிர்ப்பார்ப்பில் ஆழ்த்த, இறுதியில் அவரது கதாப்பாத்திரம் பற்றி தெரிய வரும் போது அதிர்ச்சியளிக்கிறார்.
ஹரிதா ஸ்ரீ கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இலக்கியா, சாய் ரோகிணி ஆகியோரின் நடிப்பிலும் குறையில்லை.
காதல் சரவணன், காலங்கள் தினேஷ், பிர்லா போஸ், ஷர்மிளா, கோவை குருமூர்த்தி என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது வேலையை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
சுகுமாரன் சுந்தரின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. சரண்குமாரின் பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரித்திருக்கிறது.
பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதைக்களம், அதே சமயம் சமூகத்தில் நடக்கும் சில சம்பவங்களால் ஏற்படும் விளைவுகளையும் மிக நேர்த்தியாக இயக்குநர் சந்துரு முருகானந்தம் படமாக்கியிருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்தில் ஏற்படும் எதிர்ப்பார்ப்பு இறுதி வரை பயணிப்பதோடு, கொலைகளுக்கான பின்னணி? மற்றும் கொலையாளி யார்? என்பதை யூகிக்க முடியாதபடி காட்சிகளை வடிவமைத்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
கதை எழுதி இயக்கியிருப்பதோடு, படத்தொகுப்பும் செய்துள்ள சந்துரு முருகானந்தம், ஒரு க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை எப்படி சொல்ல வேண்டும், என்பதில் மிக தெளிவாக இருந்திருக்கிறார். கொலை வழக்குகளை காவல்துறை எப்படி கையாள்கிறது, அவர்களின் விசாரணை போன்றவற்றை மிக இயல்பாக படமாக்கியிருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது.
ரேட்டிங் 3/5
Comments are closed.