“சிவலிங்காவில் நான் நான்காவது ஹீரோ தான்” ; லாரன்ஸ் ஓபன் டாக்..!

285

Sivalinga

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் லாரன்ஸ் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ வசூல் ரீதியாக லாபகரமான படமாக அமைந்துவிட்டது.. இப்போதும் பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் லாரன்ஸின் அடுத்த படமான ‘சிவலிங்கா’ வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸாக இருக்கிறது.. கமர்சியல் படங்களை தருவதில் வித்தகரான பி.வாசு இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

கதாநாயகியாக ரித்திகா சிங் நடிக்க, வடிவேலு – சக்திவேல் வாசு இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் படக்குழுவினருடன் பத்திரிகையாளர்களை சந்தித்த லாரன்ஸ், இந்தப்படத்தில் நான் நான்காவது ஹீரோ தான் என்கிற குண்டை தூக்கி போட்டார்.. அப்படியானால் இன்னும் முதல் மூன்று ஹீரோக்கள் யார் என்பதற்கு அவரே விளக்கமும் சொன்னார்..

“இந்த படத்தில் ரித்திகா சிங் தான் பர்ஸ்ட் ஹீரோ. ரொம்ப நல்ல கேரக்டர், ரொம்ப ஹார்டு ஒர்க் பண்ணியிருக்காங்க. அவங்களுடைய ஒவ்வொரு ஷாட்டும் அவ்ளோ கஷ்டப்பட்டா தான் ஓகே ஆகும். இரண்டாவது ஹீரோ வடிவேலு சார். அந்த அளவுக்கு காமெடி பண்ணியிருக்கிறார். நான் அவரோட ரசிகன். ரொம்ப நாளைக்குப்பிறகு அவரைப்பார்த்து இந்த படத்தில் நான் ரசித்தேன்.

இந்த படத்துல ஷக்தி பிரமாதமா பண்ணியிருக்காரு. அவர் நடித்த க்ளைமாக்ஸ் சீனில் எனக்கே கண்கலங்கி விட்டது. மூன்றாவது ஹீரோன்னா அவரைத்தான் சொல்லனும். அந்த வகையில், நான் நான்காவது ஹீரோதான். இந்த படத்தில் முதல் காட்சியில் இருந்தே கதை இருக்கு. காஞ்சனா படம் மாதிரி இந்த படத்திற்கும் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார் தமன்” என்றார் லாரன்ஸ்.

Comments are closed.