ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிவா மனசுல புஷ்பா’.. வாராகி இயக்கி நடித்துள்ள இந்தப்படத்திற்கு, எந்த நேரத்தில் இந்த டைட்டிலை வைத்தாரோ தெரியவில்லை, தற்போது இந்த டைட்டிலே இவருக்கு சிக்கலை இழுத்துக்கொண்டு வந்துவிட்டுள்ளது.. ஆம்.. டைட்டிலை மாற்றினால் தான் இந்தப்படம் ரிலீசாகும் என்கிற இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.
வேறு யாரும் இந்த டைட்டிலுக்கு உரிமை கொண்டாடுகிறார்களா என்றால் அதுவும் இல்லை.. டைட்டிலை மாற்றச்சொலி போர்க்கொடி தூக்கியிருப்பது சென்சார் போர்டு தான்.. இத்தனைக்கும் அழகான தமிழ் பெயர்கள் கொண்ட டைட்டில் தான்.. அப்படி இருக்க சிக்கல் உருவானது எப்படி..?
இந்தப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதுமே அரசியல் அரங்கில் அதிர்வலைகளை எழுப்பி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இரு மடங்காக்கியது உண்மைதான். ஆனால் இந்தப்படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டியபோது படத்தை பார்த்துவிட்டு சில அரசியல் வசனங்கள், கிளாமர் காட்சிகள், சில அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளிட்ட சிலவற்றை நீக்க சொன்னார்கள். சில வார்த்தைகளை மியூட் பண்ண சொன்னார்கள்.
ஆனால் எதிர்பாராத இடியாக டெல்லியில் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவில் படத்தின் டைட்டிலையும், படத்தின் மைய கேரக்டர்களான சிவா மற்றும் புஷ்பா ஆகியோரின் பெயர்களையும் மாற்றச்சொல்லி உத்தரவு வந்தது..
இதை எதிர்த்து ரிவைஸிங் கமிட்டிக்கு விண்ணப்பித்தார் வாராகி. அதையடுத்து இரண்டு தினங்களுக்குமுன் சென்சார் போர்டில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகை கௌதமி உள்ளிட்ட சில உறுப்பினர்கள் . இந்தப்படத்தை பார்த்தார்கள். படத்தில் ஒரு வார்த்தையை குறிப்பிட்டு மியூட் பண்ண சொன்ன கௌதமி, அதன்பின் டெல்லி தலைமை கூறியது போலவே படத்தின் டைட்டிலையும், படத்தில் சிவா மற்றும் புஷ்பா ஆகியோரின் பெயர்களையும் மாற்றச்சொல்லி வலியுறுத்தினார்..
இயக்குனர் வாராகி, கௌதமியிடம் அதற்கான விளக்கம் கேட்டபோது, படத்தின் டைட்டிலும் கதாபாத்திர பெயர்களும் நிஜத்தில் இருக்கும் சிலரை குறிப்பிடுவதாக கூறியுள்ளார் கௌதமி. மேலும் அந்த இரண்டு கதாபாத்திரங்களும் இப்போதுள்ள நிஜ வாழ்க்கையில் யாரை குறிக்கின்றன என்பதையும் அவரே தன் வாயால் கூறினாராம். அதுமட்டுமல்ல சம்பந்தப்பட்ட அந்த இரண்டு நபர்களிடமும் இருந்து அவர்கள் பெயரை பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் (NOC) வாங்கி கொடுத்தால் படத்திற்கு சான்றிதழ் வழங்குவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.

Comments are closed.