லிங்குசாமியின் தூக்கத்தை விரட்டிய ‘சதுரங்க வேட்டை’..!

214

படங்களை தயாரிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், நல்ல படங்களாக இருந்தால் அவற்றை லாப நோக்குடன் மட்டும் பார்க்காமல், மக்களிடம் அதைக்கொண்டுபோய் சேர்க்கும் விதமாக செயல்பட்டு வரும் இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ். நிறுவனம் தற்போது ‘சதுரங்க வேட்டை’ படத்தை வாங்கி வெளியிடுகிறது.

ரஜினி, விஜயகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களை வைத்து எண்பது, தொண்ணூறுகளில் சூப்பர்ஹிட் படங்களை தந்த இயக்குனரும் தற்போது பிஸியான நகைச்சுவை நடிகருமான மனோபாலா தான் இந்த ‘சதுரங்க வேட்டை’ படத்தை தயாரித்துள்ளார். இந்தப்படத்தை ஹெச்.வினோத் எனபவர் இயக்கியுள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத ஷான் ரால்டன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப்படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கும் நிலையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தப்படத்தை தான் வாங்கி வெளியிடுவது ஏன் என்பதற்கான சுவராஸ்யமான காரணத்தை விளக்கினார் லிங்குசாமி. “மனோபாலா பேசும்போதெல்லாம் நான் முதலில் இந்தப்படத்தை எப்படியாவது தட்டிக்கழித்து விடவேண்டும் என்றுதான் நினைத்தேன். காரணம் எங்களது தயாரிப்பிலேயே நாலு படங்கள் இருக்கின்றன. அதனால் அதையெல்லாம் முடித்தபின் புதுப்படங்களை வாங்கலாம் என்றுதான் ஐடியா. ஆனால் மும்பையில் நான் ‘அஞ்சான்’ படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது மனோபாலா இந்தப்படத்தை பார்ப்பதற்காக அனுப்பி வைத்தார்.

படப்பிடிப்பு முடிந்துவந்து தூக்க கலக்கத்துடன் தான் பார்க்க ஆரம்பித்தேன். தூக்கம் கண்ணை சொக்குகிறது. மறுநாள் படப்பிடிப்பு வேறு இருக்கிறது. ஒரு 15 நிமிடம் போனதும் இந்தப்படத்தில் ஏதோ விஷயம் இருக்கிறது என்பது ‘கிளிக்’ ஆச்சு.. அவ்வளவுதான் தூக்கம் போன இடம் தெரியவில்லை. வினோத்தின் மேக்கிங் ஸ்டைல் அவ்வளவு சூப்பராக இருந்தது. உடனே போஸுக்கு(தம்பி) போன் போட்டு இந்தப்படத்தை பார் என்றேன்.. நானாவது நட்புக்காக தயவு பண்ணுவேன். ஆனால் போஸ் தயவு தாட்சண்யமே பார்க்கமாட்டான். ஆனால் அவனையே இந்தப்படம் அசத்திவிட்டது. இப்படித்தான் நாங்கள் ‘சதுரங்க வேட்டையில் சிக்கினோம்” என்றார் லிங்குசாமி.

Comments are closed.