நடிகர்கள் : கிருஷ்ணா, சரண்யா, ஆனந்தராஜ், கிருத்திகா, அன்ஷுலா, மொட்டை ராஜேந்திரன், கல்லூரி வினோத், தங்கதுரை, சேசு
இசை : கணேஷ் ராகவேந்திரா
ஒளிப்பதிவு : விக்னேஷ் வாசு
இயக்கம் : ராமநாத்.டி
தயாரிப்பு : சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் – சின்னசாமி மெளனகுரு
அறிமுக இயக்குநர் ராமநாத்.டி இயக்கத்தில், கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, அன்ஷுலா, ஆனந்தராஜ் ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ராயர் பரம்பரை’ எப்படி இருக்கிறது? விமர்சனத்தை பார்ப்போம்.
காதல் என்றாலே பிடிக்காத ராயர் பரம்பரையைச் சேர்ந்த ஆனந்தராஜ், தனது ஊரில் காதல் ஜோடிகளை பிரிக்கும் வேலையை மறைமுகமாக செய்து வருகிறார். இதற்கிடையே, அவருடைய மகளும், கிருஷ்ணாவும் காதலிக்க, பெற்றோர் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்று நிகைக்கிறார்கள். காதல் என்றாலே பிடிக்காத ஆனந்தராஜ், இவர்களுடைய காதலை ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பதை நகைச்சுவையாக சொல்வது தான் ‘ராயர் பரம்பரை’.
முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே நம்பி படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ராமநாத்.டி. மிகப்பெரிய நட்சத்திர கூட்டத்தை வைத்துக்கொண்டு மிகப்பெரிய காமெடி தர்பார் நடத்தியிருக்கும் இயக்குநர் பல காட்சிகளில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்.
கிருஷ்ணா மிக இயல்பான வேடத்தில் ஜாலியாக நடித்திருக்கிறார். மூன்று கதாநாயகிகளுடன் ரொமான்ஸ் செய்வதை காட்டிலும் காமெடி செய்து படம் முழுவதும் கலகலப்பாக நடித்து கவர்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் புதுவரவு சரண்யா, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். மற்ற இரண்டு கதாநாயகிகளாக நடித்திருக்கும் கிருத்திகா மற்றும் அன்ஷுலா இருவரும் கலர்புல்லாக இருப்பதோடு, காதல் காட்சிகளுக்கு கைகொடுக்கும் விதத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஆனந்தராஜின் அனுபவமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. காதலை வெறுக்கும் கதாபாத்திரத்தில் வில்லத்தனத்தில் மிரட்டினாலும், பல இடங்களில் சிரிப்பு உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்.
மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை, கல்லூரி வினோத், சேசு ஆகியோர் வரும் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது.
கஸ்தூரி, கே.ஆர்.விஜயா, ஆர்.என்.ஆர்.மனோகர் ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவில் கதைக்களம் கவர்ந்திழுக்கிறது. கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் ராமநாத்.டி, ‘உள்ளத்தை அள்ளித்தா’ போன்றதொரு முழுமையான நகைச்சுவை படத்தை மிக நாகரீகமாக கொடுதிருக்கிறார்.
படத்தில் மூன்று கதாநாயகிகள், அவர்களுடான காதல் காட்சிகள் இருந்தாலும், அனைத்தையும் நேர்மையாக கையாண்டிருக்கும் இயக்குநர் குடும்பத்துடன் பார்க்க கூடிய ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இயக்கி ‘ராயர் பரம்பரை’-க்கு கெளரவம் சேர்த்திருக்கிறார்.
ரேட்டிங் 3.5/5
Comments are closed.