’பரிசு’ விமர்சனம்

236

நடிகர்கள் : ஜான்விகா,ஜெய் பாலா, கிரண் பிரதீப், சுதாகர், ஆடுகளம் நரேன், மனோபாலா, சென்ட்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்னப் பொண்ணு
இசை : ராஜீஷ், சி.வி. ஹமரா
ஒளிப்பதிவு : சங்கர் செல்வராஜ்
இயக்கம் : கலா அல்லூரி
தயாரிப்பு : ஸ்ரீ கலா கிரியேஷன்ஸ்

தனது தந்தையைப் போல் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பும் நாயகி ஜான்விகா, அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே கல்லூரியில் அவர் மீது பலர் காதல் வயப்படுகிறார்கள். தனது லட்சியத்தில் வெற்றி பெற்ற பிறகே காதல், கல்யாணம் போன்றவற்றை பற்றி யோசிப்பேன் என்பதில் ஜான்வி உறுதியாக இருக்கிறார். இதற்கிடையே, மருத்துவத்துறையில் குற்ற செயல்களில் ஈடுபடும் ஒரு கும்பலை பற்றிய ஆதாரம் ஜான்விக்கு கிடைக்கிறது. அந்த ஆதாரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்து, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஜான்வி ஈடுபடுகிறார். அதே சமயம், ஜான்வியிடம் ஆதாரம் இருப்பதை அறிந்துக் கொள்ளும் கும்பல் அவரிடம் இருக்கும் ஆதாரத்தை கைப்பற்ற முயற்சிக்கிறது. குற்றவாளிகளிடம் இருந்து ஜான்வி தப்பித்தாரா? அவரது இராணுவ கனவு என்னவானது ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகியாக நடித்துள்ள ஜான்விகா, குடும்பப் பாங்கான தோற்றத்தில் துடிப்பான கல்லூரி மாணவியாகவும், பிறருக்கு உதவும் இரக்க குணம் கொண்ட பெண்ணாகவும், துப்பாக்கி சுடுதலில் துடிப்புள்ளவராகவும், தந்தையின் கனவை நிறைவேற்றப் பாடுபடும் ஒரு மகளாகவும் , விவசாயியாகவும், ராணுவ வீரராகவும் வருகிறார். பல்வேறு தோற்றங்களில் வெளிப்பட்டு அந்தப் பாத்திரத்தின் இயல்பை உணர வைக்கிறார்.

எதையும் புன்னகையுடன் எதிர்கொள்ளும் நிதானமானகுணம் கொண்டவராக இருந்தாலும் சண்டைக் காட்சிகளில் எதிரிகளைப் பந்தாடும்போது வேறொரு அவதாரமாகத் தோன்றுகிறார். இப்படி ஆறு பேருடன் மோதும் காட்சிகளில் அவர் எகிறிக் குதித்து தனது சாகசத்தைக் காட்டி வியக்க வைக்கிறார். விவசாயம் செய்பவராக டிராக்டர் ஓட்டிக்கொண்டு ஆணுக்குப் பெண் சளைத்தவள் அல்ல என்று காட்டுகிறார் .அது மட்டும் அல்ல ராணுவ வீரராக மிடுக்குடன் தோன்றுகிறார். இவர் ஆர்ப்பாட்டமான வசனங்கள் பேசாமல் மென்மையாகவே அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறார்.வன்மையான மனதுடன் மென்மையான முறையில் தான் சவால்களைச் சந்திக்கிறார்.

ஜான் ஜான் என்று கதாநாயகியை வளைய வளைய கல்லூரியில் சுற்றி வரும் மாணவன் பாத்திரத்தில் கிரண்பிரதாப் நடித்துள்ளார். தனது உடல் மொழியாலும் நடவடிக்கைகளாலும் அவர் சிரிக்க வைக்கிறார். ராஜேஷ் பாத்திரத்தில் வரும் ஜெய் பாலா ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் கவர்கிறார்.

மனோபாலா, சின்னப்பொண்ணு ஜோடிக்கு மகனாக வரும் சென்ட்ராயன் இணைந்த கூட்டணி சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.ஆனால் பெரும்பாலும் பேசும் வசனங்கள் உருவக்கேலியாகவே உள்ளன. அந்த நகைச்சுவைக் கூட்டணியைச் சரிவரப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.

ஜான்விகாவின் தந்தையாக முன்னாள் ராணுவ வீரராக வரும் ஆடுகளம் நரேன், அன்பு மகளிடம் கனவுகளை வளர்த்தெடுக்கும் பாசமுள்ள தந்தையாக வருகிறார். தனது தோற்றத்தாலும் நடிப்பாலும் பாத்திரத்தை நிறைவு செய்துள்ளார்.

மருத்துவமனை நடத்திக் கொண்டு உறுப்பு திருட்டு செய்யும் தொழிலதிபர் பாத்திரத்தில் நடித்துள்ள சுதாகரும் தனது வில்லத்தனத்தில் கவனிக்க வைக்கிறார்.

படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. படம் தொடங்கியதும் அருவியின் அழகுடன் முதல் பாடல்காட்சி வருகிறது. அதற்குப் பிறகு இடம் பெறும் பாடல்களின் பின்புலங்களும் ரசிக்கும் படி உள்ளன.

படத்துக்குத் தெளிவான முறையில் ஒளிப்பதிவு செய்துள்ளார் சங்கர் செல்வராஜ்.

‘நன்னாரே’ பாடலின் சாயலில் ஒரு பாடல் ஒலித்தாலும் பிற பாடல்களின் மெட்டுகளை ரசிக்கும்படி இசையமைத்துள்ளார் ராஜீஷ். குறிப்பாக ‘ஆட்டங்கள் ஆடிப் பார்ப்போமே ‘,’கொஞ்சிக் கொஞ்சிப் பேசலாமா ?’ ‘போராடலாமா ?’ போன்ற பாடல்கள் இசையாலும் வரிகளாலும் கவனிக்க வைக்கின்றன. ஒரு பாடலில் தூய்மை இந்தியா பற்றிய கருத்துகள் வருகின்றன.வரிகள் ராஜேந்திர சோழன். ஆர்ப்பாட்டம் இல்லாத ஹமரா வின் பின்னணி இசை, படத்திற்குப் பக்க பலமாக அமைந்துள்ளது.

திரைக்கதையின் போக்குக்கு ஊறு செய்யாமல் படத்தொகுப்பாளர்கள் சி.எஸ்.பிரேம்குமார் , ராம் கோபி படத்தொகுப்பு செய்துள்ளனர்.

பெண்களுக்குத் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும்படி பல வசனங்கள் உள்ளன.ஒரு கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஜான்விகா பேசும் வசனம் ஒரு உதாரணம்.
அவர் பேசும்போது, ‘1943 ஜூலை 9ஆம் தேதி நேதாஜி சிங்கப்பூரில் பேசும்போது பெண்கள் துப்பாக்கி ஏந்த வேண்டும் என்றார்.ஜான்சி ராணி லட்சுமி பாய் வாளேந்தி சண்டையிட்டது போல் பெண்கள் துப்பாக்கி ஏந்தினால் இந்தியாவிற்கு விரைவில் சுதந்திரம் கிடைத்துவிடும் ‘என்றதை நினைவூட்டிப் பேசும் வசனம் பெண்களுக்குச் சரியான ஊக்கமும் உந்துதலும் தரும்.

வணிக ரீதியிலான படம் தான் என்றாலும் ஆபாசமோ இரு பொருள் வசனங்களோ தேவையற்ற வன்முறையோ இல்லாமல் பெண்களுக்கு நம்பிக்கையையும் சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் அளிக்கும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

படம் உருவாக்கத்தில் சில குறைகள், கேள்விகள் இருந்தாலும் கலா அல்லூரியின் நல்ல கருத்து சொல்லும் நோக்கத்தைப் பாராட்டலாம்.

குடும்பத்துடன் குறிப்பாகப் பெண்கள் முகம் சுழிக்காமல் பார்க்கும் படமாகவும் அவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலும் இருக்கிற வகையில் இந்தப் படத்தை வரவேற்கலாம்.

ரேட்டிங் 3/5

Comments are closed.