சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த ஜேம்ஸ் வசந்தன் திடீரென சினிமாவில் இசையமைப்பாளராக மாறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது போல, இப்போது இயக்குனராக இன்னொரு முகத்தை காட்ட வருகிறார். தற்போது ‘வானவில் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்குவதன் மூலமாக டைரக்ஷன் துறையிலும் கால் பதித்துள்ளார்.
கல்லூரி வாழ்க்கையில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளை மையமாகக்கொண்டு உருவாகும் இந்தப்படத்தில் முற்றிலும் புதுமுகங்களாக கல்லூரியில் படிக்கும் 11 பேரை அறிமுகப்படுத்தியுள்ளார் ஜேம்ஸ்.. இந்தப்படத்தில் ஜாஸ், ஹிப்பாப், கானா, கர்நாடகம், நாட்டுபுறம் என பல ஜானர்களில் மொத்தம் 17 பாடல்கள் இடம்பெறுகிறது.
அதுமட்டுமல்ல இதில் ஒரு புதிய முயற்சியாக 1940களில் வந்த பழைய படங்களைப்போல இதில் நடிப்பவர்களே பாடல்களை பாடும் முறையை மீண்டும் கொண்டு வந்துளார் ஜேம்ஸ் வசந்தன். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பாண்டிராஜ் கலகலப்பை ஏற்படுத்தினார்.
“ஜேம்ஸ் வசந்தன் இன்னும் பெரிய அளவுக்கு, உயரமான இடத்திற்கு வராததற்கு அவருக்கு பந்தா பண்ண தெரியாததுதான் காரணம்.. முன்னாடி எல்லாம் நான் ஸ்கூட்டர்ல வர்றத பாத்துட்டு இவரு பைக்ல தாம்ப்பா வர்றாரு.. பெட்ரோல் போடுறதுக்கு மட்டும் காசு கொடுத்தா போதும்னு என சம்பளத்துல கைய வச்சாங்க.. அதனால போன் அடிச்சவுடனே அட்டென்ட் பண்ணக்கூடாது.. பாடல்களை கேட்டால், உடனே போட்டு தந்துவிடக்கூடாது.. இதெல்லாம் இனிமே பண்ணுங்க சார்… நீங்களும் பெரிய இடத்துக்கு வந்துருவீங்க” என ஜேம்ஸ் வசந்தனுக்கு டிப்ஸ் கொடுத்துவிட்டு சென்றார் பாண்டிராஜ்.
Comments are closed.