’நிழல்’ விமர்சனம்

112

நடிகர்கள் : ஜனனி, விசாகன், கெளசிக், ஹரி விஜய்
இசை : எம்.அபுபக்கர்
ஒளிப்பதிவு : மோகன்குமார்
இயக்கம் : ஏ.கே.குமார்
தயாரிப்பு : எம்.ஜோதி பாண்டியன், மணிகண்டன் குப்பன்

மருத்துவரான ஜனனி, தொழிலதிபர் மகன் ஹரி விஜய் மற்றும் அவரது இரண்டு நண்பர்களை கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயற்சிக்கிறார். தாக்குதலில் இருந்து தப்பிக்கும் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். தொழிலதிபரின் மனைவி தன் மகனின் இத்தகைய நிலைக்கு காரணமானவர்களை, காவல்துறை அதிகாரி ஒருவரது உதவியுடன் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அப்போது ஜனனி பற்றிய பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது. அது என்ன ?, ஜனனியின் இந்த கொடூர தாக்குதல்களுக்கான காரணம் என்ன ? என்பதை விறுவிறுப்பான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக சொல்வதே ‘நிழல்’.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஜனனி, முதல் முறையாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில், ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். கோபம் மற்றும் பழிவாங்கும் உணர்வு என பல பரிமாணங்களை வெளிப்படுத்தியிருக்கும் ஜனனி தனது நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் கடுமையாக உழைத்திருப்பவர், அதில் நம்பும்படி பயணித்து பாராட்டு பெறுகிறார்.

காவல்துறை அதிகாரியாகவும், ஜனனியின் காதலனாகவும் நடித்திருக்கும் விஷாகன், கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் ஹரி விஜய், கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

இரண்டாவது நாயகனாக நடித்திருக்கும் கெளஷிக், கதையின் திருப்புமுனை கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கிறார். வழக்கறிஞராக நடித்திருக்கும் அபிஷேக் சங்கர், ஜனனியின் தந்தையாக நடித்திருக்கும் ரமேஷ் கண்ணா உள்ளிட்ட அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மோகன்குமார், இரவு நேர காட்சிகளையும், ஆக்‌ஷன் காட்சிகளையும் தரமாக காட்சிப்படுத்தியுள்ளார். ஒளியமைப்பு மற்றும் கோணங்கள் ஆகியவற்றின் மூலம் தேர்ந்த ஒளிப்பதிவர் என்பதை நிரூபித்திருக்கும் மோகன்குமார், படம் முழுவதையும் தரமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

எம்.அபுபக்கரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம் என்றாலும், பின்னணி இசை பலே… சொல்ல வைக்கும் ரகம்.

தினேஷின் படத்தொகுப்பு முதல் பாதி முழுவதும் சஸ்பென்ஸ் உடையாமல் கதையை நகர்த்திச் செல்வதோடு, இரண்டாம் பாதியில் திருப்பங்களை சரியான முறையில் தொகுத்து திரைக்கதையை விறுவிறுப்பாக பயணிக்க வைத்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பழிவாங்கும் படங்கள் வந்திருந்தாலும், அவற்றில் இருந்து தனது கதையை வித்தியாசப்படுத்தி காட்டும் வகையில் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் ஏ.கே.குமார், கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தை உணர்வுப்பூர்வமாக கையாண்டிருக்கிறார்.

பெண்களுக்கு எதிராக அநீதி இழப்பவர்கள் சட்டத்தில் இருந்து தப்பித்தாலும், அவர்களுக்கான தண்டனை எதாவது ஒரு வழியில் வழங்கப்பட வேண்டும், என்ற கருத்தை சாட்டையடியாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஏ.கே.குமார், அதை சுவாரஸ்யமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக கொடுத்து ‘நிழல்’ படத்தை கொண்டாட வைத்திருக்கிறார்.

ரேட்டிங் 3/5

Comments are closed.