கல்லூரி மாணவிகள் 9 பேரை பாடகியாக்கிய இசைஞானி இளையராஜா..!

192

அண்மையில் இசைஞானி இளையராஜா எத்திராஜ் கல்லூரி, ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர் கல கலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அப்போது அவரது இசையைப் பற்றி மாணவிகள் சந்தேகங்கள், கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டனர். அப்போது அந்த இரண்டு கல்லூரிகளிலும் மாணவிகள் சிலர் பாடல்கள் பாடியதுடன் அவரது இசையில் தாங்கள் பாடவும் விரும்புவதாகவும் அது தங்கள் கனவென்றும் மாணவிகள் தங்கள் விருப்பத்தை வெளியிட்டிருந்தனர்.

இது இசைஞானி இளையராஜாவின் எண்ணத்தில் அலையடித்திருக்கிறது. அதன் விளைவாக இப்போது இரண்டு கல்லூரியிலும் இசை விருப்பமுள்ள, பாடகியாக ஆசைப்பட்ட மாணவிகள் சிலரை அழைத்து குரல் சோதனை வைத்து இருக்கிறார் இசைஞானி. அவர்களில் பாடும் திறன் கொண்ட 9 மாணவிகளைத் தேர்வு செய்து இருக்கிறார்.

இந்த ஒன்பது பேரும் இளையராஜா இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் பாடகியாக அறிமுகமாகிவுள்ளனர். இசைஞானி மூலம் தங்கள் கனவு நினைவானதில் அந்த 9 மாணவிகளும் பூரிப்பில் உள்ளனர்.

Comments are closed.