’இந்த க்ரைம் தப்பில்ல’ விமர்சனம்

204

நடிகர்கள் : ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன்
இசை : பரிமளவாசன்
ஒளிப்பதிவு : ஏ.எம்.எம்.கார்த்திகேயன்
இயக்கம் : தேவகுமார்
தயாரிப்பு : மதுரியா புரொடக்‌ஷன்ஸ் – மனோஜ் கிருஷ்ணசாமி

நாயகன் பாண்டி கமல் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து போலீஸ், வழக்கறிஞர் போன்றவர்களை கடத்தி கொடூரமாக கொலை செய்வதோடு, இது தவறான செயல் அல்ல, குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தனட்னை என்று சொல்கிறார்கள். மறுபக்கம் கிராமத்து பெண்ணான மேக்னா செல்போன் விற்பனை கடையில் பணிக்கு சேர்ந்து மாடர்ன் பெண்ணாக மாறுவதோடு, மூன்று இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை கமல் குழுவினரிடம் சிக்க வைக்கிறார். இவர்களுக்கு தலைமையாக செயல்படுபவர் ஆடுகளம் நரேன். இந்த மூவர் கூட்டணியும் ஏன் இப்படி செய்கிறார்கள்? என்பதின் பின்னணி தான் ‘இந்த கிரைம் தப்பில்ல’ படத்தின் மீதிக்கதை.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் நரேன் தனது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு தூணாக நின்றிருக்கிறார்.

நாயகனாக நடித்திருக்கும் பாண்டி கமல் உணர்ச்சிகரமான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்தை கவனிக்க வைக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மேக்னா ஏலன், கிராமத்து பெண்ணாகவும், மாடர்ன் பெண்ணாகவும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

முத்துக்காளை, வெங்கள் ராவ், கிரேசி கோபால், காயத்ரி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் குறை சொல்ல முடியாதபடி நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஏ.எம்.எம்.கார்த்திகேயனின் ஒளிப்பதிவு படத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

இசையமைப்பாளர் பரிமளவாசனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாகவும், தாளம் போட வைக்கும் ரகமாகவும் இருக்கிறது. பின்னணி இசை அளவு.

எழுதி இயக்கியிருக்கும் தேவகுமார், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்களை மையமாக வைத்து படத்தை இயக்கியிருப்பதோடு, அதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பாண்டி கமல் மற்றும் மேக்னா இருவரின் கதையும் தனி தனியாக பயணிப்பது படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வதோடு, மூன்று இளைஞர்களை காதல் வலையில் சிக்க வைக்கும் சம்பவங்கள் எதிர்பாராத திருப்பங்களாக உள்ளது.

சமூக பிரச்சினையை கமர்ஷியல் திரைப்படமாக இயக்கியிருந்தாலும், தான் சொல்ல வந்த கருத்தை மிக தெளிவாக சொல்லியிருக்கும் இயக்குநர் தேவகுமார், சில பல குறைபாடுகளோடு படத்தை இயக்கியிருந்தாலும், சமூகத்திற்கான படமாக கொடுத்ததால் இந்த படத்தை தாராளமாக வரவேற்கலாம்.

ரேட்டிங் 3/5

Comments are closed.