‘விஷயம் வெளியில் தெரியக்கூடாது’ – கண்டிஷன் போடும் இயக்குனர்

232

படிக்காதவன் தவறு செய்தால் எளிதில் மாட்டிக் கொள்கிறான். ஆனால் படித்தவன் தவறு செய்தால் எளிதில் சிக்குவதில்லை. காரணம் அவன் தவறு செய்யும் போது தன் அறிவையும், படிப்பையும், திறமையையும் சட்ட நுணுக்கத்தையும் பயன்படுத்துகிறான்.

அப்படி தவறுகள் செய்யும் 5 இளைஞர்கள், அதில் ஒருவரது தவறு இன்னொருவனுக்குத் தெரியும்போது என்னாகிறது  என்பதையும் கடைசிவரை குற்றத்திலிருந்து தப்பிக்க படிப்பறிவு உதவுமா? என்பதையும் வைத்து ஒரு புதிய கோணத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘விஷயம் வெளியில் தெரியக்கூடாது’

இது வழக்கமான கதாநாயகன் நாயகி கதையல்ல.. படத்தில் காதல் இல்லை, டூயட் பாடல் கூட இல்லை.. இது முழுக்க முழுக்க நகைச்சுவை நோக்கில் உருவாகியுள்ள படம். பல இயக்குநர்களிடம் பணியாற்றி அனுபவம் பெற்ற ஏ.ராகவேந்திரா கதை, திரைக்கதை எழுதி அவரே இசையமைத்து இயக்குகிறார்.

சென்ட்ராயன், ஆர்யன், ‘மூடர் கூடம்’ குபேரன், ‘நாடோடிகள்’ நங்கன், அம்பா சங்கர், ஆகியோர் அந்த 5 கில்லாடிகளாக நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் அமிதா வருகிறார். கதையின் பெரும்பகுதி நெடுஞ்சாலைப் பகுதிகளில் நடக்கிறது. காரைக்குடி, திருமயம், புதுக்கோட்டை, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. 45 நாட்களில் முழுப் படப்பிடிப்பையும் ஒரே மூச்சில் முடித்து வந்திருக்கிறது படக்குழு.

 

Comments are closed.