நடிகர்கள் : சதீஷ், ரெஜினா கெசண்ட்ரா, நாசர், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், நமோ நாராயணன், ரெடிங் கிங்ஸ்லி
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு : எஸ்.யுவா
இயக்கம் : செல்வின் ராஜ் சேவியர்
தயாரிப்பு : ஏஜிஎஸ்
காமெடி நடிகர் சதீஷ்ம், ரெஜினா கெசண்ட்ரா நாயகன் நாயகியாக நடிக்க, நாசர், சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில், அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படம் எப்படி இருக்கு?, விமர்சனத்தை பார்ப்போம்.
நாயகன் சதீஷுக்கு விநோதமான பொருள் ஒன்று கிடைக்கிறது. அதில் இருக்கும் இறகுகளில் ஒன்றை அவர் தெரியாமல் பிறித்து விடுகிறார். அதன் பிறகு அவர் தூங்கும் போதெல்லாம் ஒரு கனவுலகத்திற்குள் செல்கிறார். அங்கு இருக்கும் பாழடைந்த பங்களாவில் பேய்கள் அவரை விரட்டுகிறது. கனவு என்றாலும் அங்கு நடப்பவை நிஜத்திலும் நடக்கிறது, அங்கு உயிர் போனால் நிஜத்திலும் உயிர் போகும் என்ற சூழல் உருவாகிறது. அதே சமயம், அவர் மட்டும் இன்றி, அவரது அம்மா, அப்பா மற்றும் அவரைச் சார்ந்தவர்களும் அந்த இறகினால், அங்கு சிக்கிக்கொள்கிறார்கள். அந்த மாய இறகின் பின்னணி என்ன?, அதில் சிக்கிக்கொண்டவர்கள் மீண்டார்களா? என்பதை நகைச்சுவையாக சொல்வதே ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’.
தனக்கு ஏற்ற கதையை தேர்வு செய்து நாயகனாக நடித்திருக்கும் சதீஷ், சிரிக்க வைப்பதோடு அழுத்தமாகவும் நடிக்க முயற்சித்திருக்கிறார். அது சில இடங்களில் எடுபட்டாலும், பல இடங்களில் எக்குதப்பாகி ரசிகர்களை எரிச்சலடைய செய்துவிடுகிறது.
நாயகி ரெஜினா கெசண்ட்ரா பேய் ஓட்டுபவராக நடித்திருக்கிறார். தனது வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்.
எக்ஸார்சிஸ்ட் ஏழுமலை என்ற கதாபாத்திரத்தில் பேய் ஓட்டும் நிபுணராக நடித்திருக்கும் நாசர், தனது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார்.
சதீஷின் அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணன், சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக பல இடங்களில் ஓவராக நடித்து கடுப்பேற்றுகிறார்.
விடிவி கணேஷ், நமோ நாராயணா, ஆதித்யா கதிர் என படத்தில் ஏராளமான நகைச்சுவை நட்சத்திரங்கள் இருந்தாலும், சிரிக்க வைப்பது ஆனந்தராஜும், ரெடின் கிங்ஸ்லியும் மட்டும் தான்.
ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா நிஜ உலகத்தையும், கனவுலகத்தையும் மிக நேர்த்தியாக படமாக்கியிருப்பதோடு, படத்தின் தரத்திற்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். அது படம் முழுவதும் தெரிவது படத்தின் கூடுதல் சிறப்பு.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் தாழ்வில்லை. பின்னணி இசை நகைச்சுவை மற்றும் பேய் காட்சிகளை பிரித்து காட்டி ரசிக்க வைக்கிறது.
மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர், நிஜ உலகம், கனவுலகம் மற்றும் பேய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு கலகலப்பான நாடகத்தை அரங்கேற்ற முயற்சித்திருக்கிறார். அந்த முயற்சியில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘காஞ்சூரின் கண்ணப்பன்’ சிரிப்பு கொண்டாட்டம்.
ரேட்டிங் 3/5
Comments are closed.