சண்டமாருதம் – விமர்சனம்

பணத்துக்காக எந்த நாசவேலைகளுக்கும் தயங்காத கொடூர குணம் படைத்த சர்வேஸ்வரனுக்கும், நாட்டுக்காக உயிரைக்கொடுக்கவும் துணியும் அன்டர்கவர் போலீஸ் ஆபிசர் சூர்யாவுக்கும் நடக்கும் யுத்தம் தான் ‘சண்ட மாருதம்’..

 

சரத்குமார் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றாலே கெட்டப், பாடி லாங்குவேஜ் என இரண்டிலும் பர்பெக்சன் காட்டுவார். இதில் ஹீரோவும் அவரே.. வில்லனும் அவரே என்பதால், வில்லன் கதாபாத்திரத்திற்காக டயலாக் டெலிவரி முதற்கொண்டு பின்னியிருக்கிறார். தனக்கு வேண்டாதவர்களை கொடூரமாக கொல்லும்போது,, க்ளைமாக்ஸில் இரண்டு சரத்குமார்களும் மோதும் காட்சிகளில் பிரமிப்பூட்டுகிறார்.. ஆனால் காதல் காட்சியிலும், காமெடியிலும் வழக்கம்போல ஆவரேஜ் பாஸ் மார்க் தான்.

 

முறைப்பொண்ணாக தாவணியில் வரும் மீரா நந்தனை விட, கலக்கல் காஸ்ட்யூமில் அண்டர்கவர் ஆபிசராக வரும் ஓவியா கிளாமரில் ஒரு படி மேலே ஏறுகிறார். ‘நேர்மையான போலீஸ்’ அதிகாரி யூனிபார்மை மீண்டும் அணிந்திருக்கும் சமுத்திரக்கனியின் நடிப்பில் துடிப்பு அதிகம். ஆனால் வில்லன்களில் கையால் சாகும் காட்சி பரிதாபம் பிளஸ் பயங்கரம்.

 

வில்லனின் நண்பனாக கிட்டத்தட்ட படம் முழுவதும் வரும் ராதாரவிக்கு இது ரீ-என்ட்ரி. க்ரைம் பிராஞ்ச் அதிகாரியாக வரும் வின்சென்ட் அசோகன், தண்ணீர் கேன் ஓனராக வரும் இமான் அண்ணாச்சி, சரத்தின் அப்பாவாக டெல்லிகணேஷ் அனைவரும் குறைசொல்ல முடியாதபடி வழக்கமான வேலைகளை செய்துவிட்டு போகிறார்கள்..

 

இசை ஜேம்ஸ் வசந்தன் தானா என கேட்க வைக்கிறது பாடல்கள். சரத்குமாரின் கதைக்கு கிரிப்பான திரைக்கதை அமைத்திருக்கும் க்ரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார், தனது நாவல்களைப்போல, இதிலும் காசி சொம்பு என்கிற சயன்ஸ் மேட்டரை புதிதாக நுழைத்து நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். அதனால் சில காட்சிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், சரத்குமாருக்கு தேவையான அம்சங்கள் நிறையவே இருக்கின்றன.

 

விறுவிறுப்பாக செல்லும் கதையில் போலீஸ் அதிகாரி சரத்குமாரின் குடும்பமும், அவர்கள் செய்யும் சேட்டைகளும் நிச்சயமாக ஸ்பீட் பிரேக்கர்தான். அதேபோல சமுத்திரக்கனியை மாஜிஸ்திரேட் முன்பு முட்டாளாக்க ஆடும் நாடகம் சரியான சினிமாத்தனம். சரத்குமார் படத்திற்கு தேவையான கரம், மசாலாவை இதில் கொஞ்சம் தூக்கலாகவே தூவியிருக்கிறார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.. ஆனால் சரத்குமார் படத்துக்கு போய்த்தான் பார்ப்போமே என தியேட்டருக்கு வருபவர்களை சரத்குமார் ஏமாற்றவில்லை என்று தாராளமாக சொல்லலாம்..

Anuradha SriramMeera NandhanOviyaSarathkumar