’மழை பிடிக்காத மனிதன்’ விமர்சனம்

நடிகர்கள் : விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சத்யராஜ், சரத்குமார், டாலி தனஞ்செயா, முரளி சர்மா, சரண்யா பொன்வண்ணன்
இசை : விஜய் ஆண்டனி மற்றும் ராய்
ஒளிப்பதிவு : எஸ்.டி.விஜய் மில்டன்
இயக்கம் : எஸ்.டி.விஜய் மில்டன்
தயாரிப்பு : இன்பினிட்டி பிலிம் அட்வெஞ்சர்ஸ்

இந்திய ராணுவத்தின் ரகசிய படையில் பணியாற்றும் விஜய் ஆண்டனி, உடன் பணியாற்றும் நண்பரின் தங்கையை காதலித்து திருமணம் செய்துக்கொள்கிறார். அவரை கொலை செய்ய துரத்தும் முன்னாள் எதிரியின் தாக்குதலில் மனைவியோடு அவரும் இறந்து விட்டார் என்று நம்பப்படுகிறது. ஆனால், உயிருக்கு போராடும் அவரை காப்பாற்றும் நண்பர், மீண்டும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதி, இறந்தவர் இறந்ததாகவே இருக்கட்டும் என்று நினைத்து, அவரை யாருக்கும் தெரியாமல் அந்தமானுக்கு அழைத்துச் செல்கிறார்.

புதிய இடத்திற்கு வரும் விஜய் ஆண்டனிக்கு புதிய உறவுகள் கிடைக்க, அவர்கள் மூலம் புதிய பிரச்சனைகளும் வருகிறது. அந்த பிரச்சனைகளில் இருந்து அவர் விடுபட்டாரா?, அவரை தேடும் எதிரிகளிடம் பிடிபட்டாரா? என்பதை விஜய் ஆண்டனியின் முந்தைய படத்தின் தொடர்ச்சியாக சொல்வதே ‘மழை பிடிக்காத மனிதன்’.

தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கும் விஜய் ஆண்டனி, ஆக்‌ஷனில் அதிரடியையும், நடிப்பில் நிதானத்தையும் வெளிப்படுத்தி மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுகிறார். எதில் அசத்தினாலும் காதலில் மட்டும் சற்று சொதப்பியிருப்பவர், ஒரு கட்டத்தில் காதலே வேண்டாம் என்று ஒதுங்கிப்போய் கதையோடு ஒட்டாமல் போய்விடுகிறார். பிறகு மீண்டும் ஆக்‌ஷன் மூலம் கதையில் இணைந்துக்கொண்டு பின்னி எடுத்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மேகா ஆகாஷுக்கு கொடுத்த வேலை குறைவு என்றாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் டாலி தனன்ஜெயா, போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் முரளி சர்மா ஆகியோருடன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சரத்குமார் மற்றும் சத்யராஜ் ஆகியோரின் அனுபவமான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், சுரேந்தர் தாக்கூர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனி மற்றும் ராய் ஆகியோரின் இசையில் பாடல்கள் ஹிட் ரகங்கள். பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளுக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறது.

விஜய் மில்டனின் ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல்-இன் படத்தொகுப்பும் படத்தின் தரத்தை பல மடங்கு அதிகரிக்கச் செய்திருக்கிறது.

ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கியிருக்கும் எஸ்.டி.விஜய் மில்டன், விஜய் ஆண்டனியை அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக மட்டும் இன்றி காதல் நாயகனாகவும் காட்ட முயற்சித்திருப்பவர், ஆக்‌ஷன் காட்சிகளை கொஞ்சம் தூக்கலாக வைத்து அவரை அதிரடி நாயகனாக மக்கள் மனதில் பதிய வைத்திருக்கிறார்.

விறுவிறுப்பான திரைக்கதை, வேகமாக காட்சிகள், அதிரடியான ஆக்‌ஷன் என்றாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்கல் ரசிக்கும் விதத்தில் அமைதியாகவும் திரைக்கதையை பயணிக்க வைத்திருக்கிறார். முதல் பாதி படம் சற்று மெதுவாக நகர்வது போல் இருந்தாலும், இரண்டாம் பாதியில் அந்த உணர்வை ரசிகர்கள் மறந்துவிட்டு படத்துடன் ஒன்றிவிடுகிறார்கள்.

வில்லனை அழிப்பவன் மட்டுமே ஆக்‌ஷன் ஹீரோ அல்ல, செய்யும் தவறை உணர வைத்து கெட்டவனை திருத்துபவனும் ஆக்‌ஷன் ஹீரோ தான் என்று நிரூபித்திருக்கும் இந்த ‘மழை பிடிக்காத மனிதன்’ நிச்சயம் ரசிகர்களுக்கு பிடித்தவனாக இருப்பான்.

ரேட்டிங் 3.5/5

mazhai pidikatha manithan reviewtamil movie mazhai pidikatha manithan movie reviewtamil movie mazhai pidikatha manithan reivewதமிழ்ப் படம் மழை பிடிக்காத மனிதன்மழை பிடிக்காத மனிதன் சினிமா விமர்சனம்மழை பிடிக்காத மனிதன் விமர்சனம்