நேருக்கு நேர் படத்தில் ஜஸ்ட் ஒரு சிம்பிள் ஹீரோவாக அறிமுகமாகி இன்று ‘மாஸ்’ ஹீரோவாக வளர்ந்தபின்னும் கூட எந்த பட்டங்களையும் சூடிக்கொள்ளாதவர் சூர்யா.. சினிமாவை நேசிப்பவர் என்பதைவிட சுவாசிப்பவர் என்று சொன்னால் சரியான வார்த்தையாக இருக்கும். அதனாலேயே வெற்றி தோல்வி இரண்டையும் சரிசமமாகவே எடுத்துக்கொள்கிறார்.
சினிமாவில் எப்படி நடப்பது என்பதை தந்தை போட்டுத்தந்த பாதையிலும், எப்படி நடிப்பது என்பதை தானே தீர்மானித்துக்கொண்ட பாதையிலும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருபவர். எதோ நடித்தோம் சம்பாதித்தோம் என்றில்லாமல், தந்தையின் வழியை பின்பற்றி ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவிக்கரம் நீட்டியதில் தான் மற்ற நடிகர்களிடம் இருந்து சூர்யா தனித்து தெரிகிறார்..
தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி திறமையானவர்களுக்கு வாய்ப்பும் கொடுத்து வருகிறார். சினிமாவில் நுழைந்து 18 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று 40வது பிறந்தநாள் காணும் சூர்யாவுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.