ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா.
அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.
படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், படம் வரும் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பி.வி.ஆர் ஐநாக்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.
‘உயிர் தமிழுக்கு’ பட வெளியீடு குறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம் பாவா கூறும்போது, “ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் ட்ரெய்லருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது, இந்த வரவேற்பால் படத்தின் நாயகன் இயக்குநர் அமீருக்கும் எனக்கும் படக்குழுவினருக்கும் மகிழ்ச்சி. மேலும் அமீர் படம் வந்து நீண்ட நாட்கள் ஆவதால் அவரது ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் சூட்டோடு சூட்டாக இப்படி ஒரு அரசியல் காதல் காமெடி படம் வெளியாவதால் நேரடியாக மக்களிடம் நூறு சதவீதம் கனெக்டாகும் என நினைக்கிறேன்.
இதுவரை பார்த்திராத ஒரு புது அமீரை ரசிகர்கள் இப்படத்தில் பார்க்கலாம். காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்து ஏரியாவிலும் ஒரு மாஸ் எண்டர்டைனராக அதகளப்படுத்தியிருக்கிறார். வித்யாசாகரின் இசையில் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து மில்லியன் கணக்கில் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் குடும்பத்துடன் சென்று பார்க்கும் ரசிகர்களுக்கு உயிர் தமிழுக்கு சரியான விருந்தாக இருக்கும் இது இயக்குநராக,தயாரிப்பாளராக என்னுடைய கேரண்டி” என நம்பிக்கையுடன் கூறினார்.
Comments are closed.