
SRI SUBRA YOGA JEEVA PRODUCTION & ENTERTAINMENT நிறுவனம் சார்பில் மலேசியாவில் மதிப்புமிக்க தொழிலதிபராக விளங்கும் புஸ்பவதி, பசுபதி ஆகியோர் தயாரித்துள்ள புதிய படமே ‘அங்காளி பங்காளி’.
இப்படத்தில் விஷ்ணு பிரியன், சானியாதாரா, சூரி, டெல்லி கணேஷ், மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் பாலமுருகன் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை மற்றும் வெளியீட்டு விழா சென்னை R.K.V.ஸ்டுடியோவில் விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் கலைப்புலி S.தாணு, நடிகர்,இயக்குனர் ராமகிருஷ்ணன், கலி இயக்குனர் G.K, இயக்குனர் S.S.ஸ்டேன்லி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கலைப்புலி S.தாணு பேசும்போது,
இன்ப நாள் இது, இனிய நாள் இது. இப்படத்தின் ட்ரைலரைப் பார்க்கும்போது இதில் நடித்துள்ள நடிகர்களின் வெற்றி பெறவேண்டும் என்கிற முனைப்பு தெரிகிறது. அதுவும் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் வெகு கமர்சியலாக, ரசிக்கும்படியும் இருக்கினறன. நிச்சயம் இப்படமும், பாடல்களும் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பரவசமாய் மக்களின் செவிகளுக்குக் குளிர்ச்சி தரும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. இப்படமும், படக்குழுவினரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இயக்குனர், நடிகர் ராம் கிருஷ்ணன் பேசும்போது,
இப்படத்திற்கும், எனக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் U.K. செந்தில் குமார் சாரின் முதல் பாடலின் ஒளிப்பதிவு மிகவும் கலர்ஃபுல்லாகக் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருந்தது. குறிப்பாக பாடல் வரிகள் புதுமையான வரிகளாக இருந்தன. நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன்.
அதேபோல் பாடல் காட்சியில் ஹீரோ விஷ்ணு பிரியனும் சரி, ஹீரோயின் சானியாதாராவும் சரி அப்படி ஒரு அட்டகாசமான குத்தாட்டம் போட்டிருந்தார்கள். அதுவும் சானியாதாரா இப்படியெல்லாம் வேகமாக டான்ஸ் ஆடுவார் என்பது எனக்குத் தெரியாது. அதை நான் எதிர்பார்க்கவேயில்லை.
மலேசியாவிலிருந்து இங்கே வந்து படம் தயாரிப்பதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும். இந்தப் படத்தின் தயாரிப்பாளரின் தைரியத்திற்கு பாராட்டுக்கள். கடவுள் இருக்கிறார். நிச்சயம் இப்படத்தை வெற்றி படமாக்க நிச்சயம் துணை புரிவார்.
கலை இயக்குனர் G.K. பேசும்போது,
மன்னிக்கவும். நான் இந்தப் படத்தின் முதல் பாடலைப் பார்க்கவில்லை. இரண்டாவது பாடலை மட்டும்தான் பார்த்தேன். அற்புதம். அதுவும் என் நண்பன் ஒளிப்பதிவாளர் U.K.செந்தில் குமாரின் ஒளிப்பதிவு அருமை. ஃபிரேமில் எந்த அளவுக்கு landscapeக்கான இடைவெளி தரவேண்டும் எனபதை துல்லியமாக அறிந்தவன். வெற்றிப்படங்களில் எல்லாம் அவன் இருப்பான். இப்படத்திலும் அவன் இருக்கிறான். எனவே நிச்சயம் இப்படம் வெற்றி பெரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
பாடலாசிரியர் அண்ணாமலை பேசும்போது,
என் நண்பன் கபிலனைப் போல எனக்கும் பாடல் எழுத வேண்டும் என்று ஆசை. அதாவது ‘உன் சமையலறையில்’ என்ற பாடலைப் போன்று. காரணம் பாடலுக்கு இசை என்றிருந்தால்தான் ஒரு பாடலாசிரியரின் முழுமையான கவிதை வரிகள் ரசிகர்களிடம் சேரும். ஆனால் நான் இதுவரை வேலை செய்த எல்லா இசையமைப்பாளர்களை விட ஸ்ரீகாந்த் தேவாவிடம் வேலை செய்தது சந்தோசம். அதற்கு காரணம் 25௦ பாடல்களுக்கு மேல் எழுதியிருந்தாலும் முதல் முதலாக என் பாடல்வரிகளுக்கேற்ப ட்யூன் போட்ட முதல் இசையமைப்பாளர் அவர்தான். அதேபோல் நான் விஜய் ஆண்டனியிடம் வேலை செய்யும்பொது மிகவும் சீரியசாக இருப்பார். ஆனால் ஸ்ரீகாந்த் தேவாவோ மிகவும் ஜாலியாக வேலை செய்வது எங்களுக்கெல்லாம் உற்சாகமாக இருக்கும்.
அதேபோல் நான் அனுஷ்கா. ஹன்சிகா மோத்வாணி போன்ற ஹீரோயின்களுக்கு பாடல் எழுதியிருக்கிறேன். ஆனால் அவர்களெல்லாம் என் பாடலைப் பற்றி எதுவும் சொன்னதில்லை. ஆனால் இப்படத்தின் ஹீரோயின் என் பாடல்களின் பாடல் வரிகளைக் குறிப்பிட்டு என்னைப் பாராட்டினார்.
இப்படத்தின் மற்றொரு பாடலாசிரியர் கட்டளை ராஜா என் பாடல்களைவிட சிறப்பாக எழுதியுள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள். இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.
பாடலாசிரியர் கட்டளை ராஜா பேசும்போது,
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எங்களுக்கெல்லாம் சாப விமோச்சனம் கிடைத்துள்ளது. அதற்கு கடவுள் போல இருக்கும் எங்கள் தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். இப்படம் வெற்றியடைந்து எங்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும். நன்றி வணக்கம்.
ஹீரோ விஷ்ணு பிரியன் பேசும்போது,
முதலில் இந்தப் படத்தின் ஹீரோ நான் கிடையாது. ராமகிருஷ்ணன்தான். இடையில் அவர் அவரே இயக்கும் படத்திற்கு சென்றுவிட்டதால் எனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. நான் ஏழு வயதில் அம்மாவை இழந்தவன். அப்பாவின் ஆதரவும் கிடையாது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் எனக்கு அம்மா போல. அதற்காகவே இந்தப் படத்தில் நான் இடம் பெற்றுள்ளேன்.
இப்போது வரும் படங்களிலெல்லாம் ஹீரோ நல்லவனாக இருப்பதில்லை. ஆனால் இந்தப் படத்தில் நான் மிக நல்லவனாகவே வருகிறேன். இந்தக் கேரக்டரைக் கொடுத்த இயக்குனர் பாலமுருகனுக்கு என் நன்றிகள்.
ஹீரோயின் சானியாதாரா பேசும்போது,
இந்தப் படத்தில் உள்ள அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளோம். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெற நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.
Comments are closed.