தயாரிப்பாளர் சங்க தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.. இதில் தயாரிப்பாளர்கள் பல அணிகளாக பிரிந்து போட்டியிடுவதால் ஒருவருக்கொருவ்பர் சராமாரியாக குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுகின்றனர்.. குறிப்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஷால் மீது நிறைய விமர்சனங்களையும் கண்டனங்களையும் சில தயாரிப்பாளர்கள் முன் வைத்து கடுமையாக தாக்கி வருகிறார்கள்..
இதில் குறிப்பாக அமைதிப்படை, கங்காரு படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என்பவர் விஷாலை தொடர்ந்து தாக்கி பேசி வருகிறார்… நடிகர்சங்க கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள ரஜினி-கமலுக்கு விஷால் அழைப்பு விடுத்திருப்பது குறித்தும், அதில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டும் ரஜினி-கமல் இருவருக்கும் கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் சுரேஷ் காமாட்சி..
அவர் கூறியிருப்பதன் சாராம்சம் இதுதான்.. “இப்போது தேர்ந்த அரசியல்வாதியைப் போல நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவை கையிலெடுத்து அதற்கு உங்களை இழுத்து விளம்பரம் தேடி ஓட்டுக்களை பெறலாம் என்று கணக்குப் போட்டு வேலை செய்கிறார்.
அதற்கு உங்களை (ரஜினி-கமல்) பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். இந்த அடிக்கல் நாட்டுவிழாவை செய்யத் தகுதியானவர் நீங்கள்தான் என்ற மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்கப் போவதில்லை. என்னுடைய வேண்டுகோளெல்லாம் நீங்கள் விஷாலின் பதவி ஆசைக்கும் தவறான முன்னெடுப்புக்கும் துணைபோகவேண்டாம் என்ற ஒன்றே ஒன்றுதான்.
அதற்கு துணைபோகவேண்டாம் எனச்சொல்ல மிக முக்கியமான காரணம் இந்தக் கட்டிடத்திற்கு சென்னை மாநகராட்சி இன்னும் முறைப்படியான அனுமதி கொடுக்கவில்லையென்பதுதான். முறையான அனுமதி பெறாமல் அடிக்கல் நாட்ட நடத்தப்படும் இந்த விழாவில் நீங்கள் கலந்துகொண்டு உங்கள் மீது ஒரு சிறு கரும்புள்ளி விழ விட வேண்டாம் என்பது என் வேண்டுகோளும் என் போன்ற சிறு தயாரிப்பாளர்களின் வேண்டுகோளும் ஆகும்.” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.