முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு இயக்குநர் சீனு ராமசாமியின் கோரிக்கை!

9

எழுத்தாளர், இயக்குநர் என பல தளங்களில் இயங்கி வருபவர் சீனு ராமசாமி. சமீபத்தில் இவர் எழுதிய ‘சினிமாவின் ஆன்மா’ புத்தகம் குறித்து முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “நான் எழுதி, சந்தியா பதிப்பகம் வெளியிட்டு இருக்கும் புத்தகம் ‘சினிமாவின் ஆன்மா (சினிமா ரசனைக் கல்வியும் இன்னும் சில கட்டுரைகளும்)’. அது என்ன சினிமா ரசனை கல்வி என்றால் பள்ளிக்கூடங்களில் ஸ்போர்ட்ஸ், ஓவியம் என்று பல விஷயங்களும் சொல்லித் தருகிறார்கள். ஆனால் எல்லோரும் விளையாட்டு வீரர்களாகவோ, ஓவியர்கள் ஆகவோ மின்னுவதில்லை. இப்படி நுண்கலைகளுக்கு நம்மிடம் வகுப்புகள் உள்ளது. ஆனால், நம் மக்களின் நாடி நரம்புகளில் ஊறி இருக்கும் சினிமாவைப் பற்றிய சரியான புரிதல் ஏற்படுத்தும் வகுப்புகள் இங்கே இல்லை.

குறிப்பாக, இன்றைய தலைமுறை குழந்தைகள் பெரும்பாலும் செல்ஃபோனுடன் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு அசல் சினிமா எது என்று அடையாளப்படுத்த வேண்டியது நம் கடமை. குழந்தைகளுக்கு சத்துணவை விட இந்த சினிமா ரசனை கல்வி முக்கியமானது என்பது எனது ஆழமான கருத்து. குழந்தைகளுக்கான உன்னதமான திரைப்படங்களை சிறுவயதிலேயே அவர்களிடம் காட்டி அதைப் பற்றிய ரசனையையும் புரிதலையும் உருவாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் நமக்கும் இருக்கிறது.

இந்த புத்தகம் மூலமாக பலதரப்பட்ட குழந்தைகளுக்கு திரைப்படங்களை போட்டு காட்டி இந்த நூலை எழுதியிருக்கிறேன். இது குழந்தைகள் படிக்கிற புத்தகமா என்று கேட்டால், இல்லை! சினிமா ரசனை கல்வியை ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு எப்படி சொல்லித் தரலாம் என்பதைப் பற்றிய புத்தகம்.

இது ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தகம். சினிமா மாணவர்களுக்கான புத்தகம். சினிமாவை நேசிக்கும் இளைஞர்களுக்கான புத்தகம். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம். இதை நான் எழுதினேன் என்பதற்காக சொல்லவில்லை. கிட்டத்தட்ட 15 வருடங்களாக இதை செய்து கொண்டிருக்கிறேன்.

எழுத, படிக்க, ஓவியம் வரைய, விளையாட என குழந்தைகளுக்கு எல்லாமே சொல்லித் தரும் நாம் எது பார்க்க வேண்டிய திரைப்படம் என்பதை சொல்லித் தருவதில்லை. அந்த வகையில் இந்த புத்தகம் எல்லோரிடமும் போய் சேர வேண்டும் என்று விரும்புகிறேன். தற்போது புதிதாக அமைந்திருக்கிற ஜோசப் விஜய் அரசு இந்த சினிமா ரசனை கல்வியை அனைத்து பள்ளிகளிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். தமிழ்நாட்டில் இருக்கும் ஆரம்ப பள்ளிகளில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் எப்படி தனி ஆய்வகம் இருக்கிறதோ அதுபோல ஹோம் தியேட்டர் ஒன்று வைத்து மாணவர்களின் ரசனையை, புரிதலை மேம்படுத்தக்கூடிய திரைப்படங்களை போட்டு காட்டி சினிமாவை கல்வியாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் ‘சினிமாவின் ஆன்மா'” என்றார்.

Comments are closed.