அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும் , இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், A1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட்டிங் செய்தவர் படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால். குறிப்பாக, இவர் 2013ம் ஆண்டு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்பட தொகுப்புக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது பெற்றவர். அவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’ககன மார்கன்’ ஒரு கொலை மர்மம் மற்றும் கிரைம் திரில்லர் திரைப்படமாகும்.
இதில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். ’ககன மார்கன்’ என்றால், சித்தர்களின் அகராதியில் ‘காற்றின் வழி பயணிப்பவன்’ என்று பொருள். வழக்கமான மர்மம் – கிரைம் திரில்லர் ஆக இல்லாமல், புதிய வகையான கதாபாத்திரங்கள், தமிழ் பாரம்பரிய மரபு சார்ந்த அம்சங்களை உள்ளடக்கிய புலனாய்வு திரைக்கதை மற்றும் வித்தியாசமான விஷுவல் எபெக்ட்ஸ் அம்சங்களுடன், ’ககன மார்கன்’ விறுவிறுப்பான புலனாய்வு கதையாக இருக்கும்.
தண்ணீருக்குள் நடக்கும் காட்சிகள் இந்த படத்தில் முக்கிய அம்சம் வகிப்பதால், படத்தின் பல முக்கிய காட்சிகள் பல நாட்களாக மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இந்த படத்தில் பிரம்மிக்கத்தக்க VFX இடம் பெறுகின்றன.
’ககன மார்கன்’ குடும்பமாக வந்து பார்த்து மகிழக் கூடிய படமாக இருக்கும். விஜய் ஆண்டனி அவர்கள் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன், அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர் ஆகியோர் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளார்கள். மற்றும் தீப்ஷிகா, கலக்கப்போவது யாரு புகழ் அர்ச்சனா, கனிமொழி, அந்தகாரம் நட்ராஜன் ஆகியோரும் நடித்துள்ளார்கள். மிகவும் வித்தியாசமான இந்த ’ககன மார்கன்’ வெளியீட்டிற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.
யுவா.எஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தின் கலை இயக்குநராக ராஜா.ஏ பணியாற்ற படத்தொகைப்பை படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால் கவனித்துள்ளார்.
Comments are closed.