நடிகர்கள் : ஜி.வி.பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், ரோகினி, நந்தினி, தலைவாசல் விஜய், இளவரசு, கீதா கைலாசம்
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி
இயக்கம் : ஆனந்த் ரவிச்சந்திரன்
தயாரிப்பு : நட்மெக் புரொடக்ஷன்ஸ்
அறிமுக இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘டியர்’ படம் எப்படி?, விமர்சனத்தை பார்ப்போம்.
மெல்லிய சத்தம் கேட்டாலே தூக்கத்தில் இருந்து எழுந்துக்கொள்ளும் பழக்கம் உடைய நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும், தூங்கும் போது சத்தமாக குரட்டை விடும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் திருமணம் நடக்கிறது. ஐஸ்வர்யா ராஷின் குரட்டையால், ஜி.வி.பிரகாஷ் குமார் எத்தகைய பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதையும், தன் குரட்டை சிக்கலால் ஐஸ்வர்யா ராஜேஷ் எத்தகைய அவமானத்தை எதிர்கொள்கிறார் என்பதையும் சொல்வது தான் ‘டியர் படத்தின் கதை.
வித்தியாசமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ், இந்த படத்தில் செய்தி வாசிப்பாளராகவும், தூக்கத்திற்கு முக்கியத்துவம் தருபவராகவும் நடித்திருக்கிறார். அமைதியாக தூங்குவதே நிம்மதியான வாழ்க்கை, என்று நினைப்பவருக்கு, சத்தமாக குரட்டை விடும் பெண் மனைவியாக அமைந்ததும், தனது இக்கட்டான சூழலை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பதை தனது நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சிறு சிறு அசைவுகளில் கூட அசத்தியிருக்கும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பல மடங்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறார்.
குறையாக பார்க்கவில்லை என்றாலும் குரட்டை சிக்கலால் ஒரு பெண் எப்படிப்பட்ட அவமானங்களை எதிர்கொள்கிறார் என்பதை தனது இயல்பான நடிப்பின் மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.
நாயகனின் அண்ணனாக நடித்த காளி வெங்கட் அவரது மனைவியாக நடித்த நந்தினி, நாயகனின் அப்பாவாக நடித்த தலைவாசல் விஜய் அவரது மனைவி ரோகினி, நாயகியின் பெற்றோராக நடித்த இளவரசு மற்றும் கீதா கைலாசம் ஆகியோரின் அனுபவமான நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் அப்துல் லீ சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தியின் கேமரா கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்துவதை சிறப்பாக செய்திருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
நாயகியின் குரட்டை சிக்கலை மையமாக வைத்துக்கொண்டு தம்பதிகளின் புரிதல் உள்ளிட்ட பல விசயங்கள் பற்றி பேசியிருக்கும் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன், தம்பதிகள் இடையே ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வையும் கொடுத்திருக்கிறார்.
வித்தியாசமான கதை, நடிகர்களிடம் வேலை வாங்கிய விதம், நேர்த்தியான திரைக்கதை மற்றும் காட்சிகள் என அனைத்தையும் அளவாக கையாண்டிருக்கும் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன், அனைத்து தரப்பினரும் பார்த்து மகிழும்படியான ஒரு படத்தை கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்.
ரேட்டிங் 4\5
Comments are closed.