தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான கார்த்திக்கு இந்த வருடம் அவரது திரை வாழ்வில் பொன்னான வருடமாக அமைந்துள்ளது. விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ படங்கள் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளன. சர்தாரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக, சர்தார் படத்தின் வெற்றிவிழா சந்திப்பில் நடிகர் கார்த்தி அறிவித்தார்.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான விருமன் படத்தில் கரடுமுரடான தோற்றத்தில் கிராமத்து மனிதனாக மிரட்டியிருந்தார் கார்த்தி. அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் நீண்ட வருட கனவு திரைப்படமாக, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் முதன்மை பாத்திரமான வந்தியதேவன் பாத்திரத்தில், அப்படியே ராஜா காலத்து ஒற்றனாக மக்களின் மனம் கவர்ந்தார். இதைத்தொடர்ந்து தீபாவளி கொண்டாட்டமாக வெளியான சர்தார் படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் உளவாளி கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரது நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டுள்ளார். மாறுபட்ட கதைக்களம், விதவிதமான கதாப்பாத்திரம் என ஒவ்வொரு படத்திலும் அசத்தி வருகிறார் கார்த்தி. கார்த்தி படம் என்றால் நம்பி தியேட்டர் போகலாம் எனும் கருத்தை மக்கள் மனதில் அழுத்தமாக பதித்து, தனக்கென தனியொரு இடத்தை பிடித்துள்ளார்.
தீபாவளிக்கு வெளியான சர்தார் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, எட்டுத்திக்கும் ‘சர்தார்’ பேச்சாகவே இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் உருவாகவுள்ளதாக அறிவித்துள்ளார் கார்த்தி. அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பையடுத்து ரசிகர்கள் இச்செய்தியினை கொண்டாடி வருகின்றனர்.
Comments are closed.