’வரலாறு முக்கியம்’ விமர்சனம்

234

நடிகர்கள் : ஜீவா, காஷ்மீரா பர்தேஷி, பிராக்யா நாக்ரா, கே.எஸ்.ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சாரா,
இசை : ஷான் ரஹ்மான்
ஒளிப்பதிவு சக்தி சரவணன்
இயக்கம் : சந்தோஷ் குமார்
தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ் – ஆர்.பி.செளத்ரி

யாரை பற்றியும், எதை பற்றியும் யோசிக்காமல் தான் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதும் என்று இருக்கும் வாலிபர் ஜீவாவின் தெருவில் மலையாள குடும்பம் ஒன்று குடி வருகிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் நாயகி காஷ்மீரா பர்தேசியை ஜீவா காதலிக்க, காஷ்மீரா பர்தேசியின் தங்கை பிராக்யா நாக்ரா ஜீவாவை காதலிக்கிறார். இறுதியில் யார் யாருடைய காதல் வெற்றி பெற்றது? என்பதை ஜாலியாகவும், கிளுகிளுப்பாகவும் சொல்வது தான் ‘வரலாறு முக்கியம்’.

ஜீவாவுக்கு நூறு சதவீதம் பொருத்தமாக இருக்கும் கதாபாத்திரம். எதை பற்றியும் யோசிக்காமல் ஜாலியாக இருக்கும் வேடத்தில் பட்டையை கிளப்பும் ஜீவா, காதல் காட்சிகளிலும் படு அமர்க்களப்படுத்துகிறார். முதலை தங்கை பார்த்து காதல் கொள்பவர், பிறகு அக்காவை பார்த்து அவர் பின்னாள் சுற்றும் காட்சிகளும், காதலியை சந்திக்க காண்டம் எடுத்து செல்லும் காட்சிகளிலும் திரையரங்கே அதிர்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் காஷ்மீரா பர்தேசி, காஷ்மீர் ஆப்பிள் போல் பிரஷாக இருக்கிறார். அழகைப் போலவே நடிப்பிலும் ரசிக்க வைக்கிறார்.

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் பிராக்யா நாக்ரா, முதல் காட்சியிலேயே ரசிகர்களை சூடேற்றும் விதத்தில் நடித்திருப்பவர், அடிக்கடி பாவடை சட்டையில் வந்து ரசிகர்களை குளிரச்செய்கிறார்.

அரசியல்வாதியாக நடித்திருக்கும் விடிவி கணேஷின் டெல்லி ஆசையும், கண்ணாடியில் கோடு போடும் முறையில் கலகலப்பு. படம் முழுவதும் தனது வசனங்களால் சிரிக்க வைப்பவர், அடிக்கடி டெல்லியை சம்மந்தப்படுத்தி பேசும் காட்சிகள் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

ஜீவாவின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணன், நாயகிகளின் தந்தையாக நடித்திருக்கும் மலையாள நடிகர், டி.எஸ்.கே, சாரா, மொட்டை ராஜேந்திரன் என அனைவரும் தங்களது பங்குக்கு சிரிக்க வைக்கிறார்கள்.

சக்தி சரவணனின் ஒளிப்பதிவு பிரம்மாண்டமாகவும் அழகாகவும் இருக்கிறது. குறிப்பாக பாடல் காட்சிகளை படமாக்கிய விதம் ரசிக்க வைக்கிறது.

ஷான் ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ரகங்கள். பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.

கதையே இல்லை என்றாலும் திரைக்கதை மற்றும் காட்சிகள் மூலம் பல படங்கள் ஜாலியாக நகர்வதோடு, இரண்டரை மணி நேரம் எப்படி போனது என்பதே தெரியாது. அப்படி ஒரு படமாக இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சந்தோஷ் ராஜன், மாட்டாத வகையில் இங்கு யாரும் உத்தமன் இல்லை, என்ற கருவை வைத்துக்கொண்டு இளைஞர்களுக்கான படமாக கொடுத்திருக்கிறார்.

ஜீவாவை எப்படி காட்டினால் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதை மிகசரியாக செய்திருக்கும் இயக்குநர் இரட்டை அர்த்த வசனங்களை கூட நாகரீகமாக கையாண்டு ரசிக்க வைத்திருக்கிறார்.

ரேட்டிங் 3/5

Comments are closed.