தான் இயக்கிவரும் துப்பாக்கி படத்தின் இந்தி ரீமேக்கை ஏ.ஆர்.முருகதாஸ் முடிக்கவும், தான் நடித்துவரும் ஜில்லா படத்தை விஜய் முடிக்கவும் நேரம் சரியாகத்தான் இருக்கும்.. காரணம் அப்படியே அடுத்த படத்தில் இவர்கள் இருவரும் இணைகிறார்கள். முதலிலேயே இந்தப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார் என்பதையும் சொல்லிவிட்டு அடுத்ததாக விஷயத்துக்கு உள்ளே போவோம்.
ஒரே பாடலின் மூலம் உலகப்புகழ் அடைய முடியும் என்பதற்கு உதாரணம் காட்டவேண்டும் என்றால் அதற்கு பொருத்தமானவர் அனிருத் மட்டும்தான். தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் கூட்டணியில் இவரது ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பிக்க, ‘கொலவெறி’ பாடல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
இதேபோல கொலவெறி டைப் பாடல் ஒன்றை விஜய் நடிக்கும் படத்திலும் வைக்க இப்போதே தயாராகி வருகிறார் அனிருத். விஜய் இதுவரை கிட்டத்தட்ட 25 பாடல்கள் வரை பாடியிருக்கிறார். இருந்தாலும் அவற்றிலிருந்து இந்தப்பாடலை முற்றிலும் மாறுபட்டதாக அமைக்கவேண்டும் என்ற உத்வேகம் அனிருத்திடம் இருக்கிறது.
இந்தப்பாடலின் மூலம் விஜய் ரசிகர்களிடம் எளிதாக ரீச்சாகி விடலாம் என கணக்கு போட்டிருக்கிறார் அனிருத். தற்போது தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’, சிவகார்த்திகேயனின் ‘மான்கராத்தே’ இவற்றுடன் செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படத்துக்கான பின்னணி இசை என படுபிஸியாக இயங்கிக்கொண்டிருக்கிறார் அனிருத்.