இன்றைக்கு பிரபலமாக இருக்கும் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்கள் நேரடியாக மக்களை சென்றடைய நம்புவது சமூக வலைதளங்களைத்தான். குறிப்பாக திரையுலக பிரபலங்கள் தங்களது படங்களைப் பற்றிய விபரங்களை ரசிகர்களுடன் இதன்மூலம்தான் பகிர்ந்துகொள்கிறார்கள். அந்தவகையில் ஃபேஸ்புக்கைவிட ட்விட்டர்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அப்படிப்பட்ட ட்விட்டர் நம்ம வடிவேலுவை மட்டும் விட்டுவிடுமா என்ன? ஆமாங்க.. இரண்டு நாளுக்கு முன்புதான் ட்விட்டர்ல தன்னோட கணக்கை துவங்கியிருக்கிறார் வடிவேலு. ஏற்கனவே தனது படம் எதுவும் வெளியாகமல் தனக்கும் ரசிகர்களுக்கும் ஒர் இடைவெளி விழுந்துவிட்டதாக கருதும் வடிவேலு, ட்விட்டர் மூலம் தன்னைப்பற்றிய தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். இதன்மூலம் தங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்கலாம் என நம்புகிறார்.
தற்போது அவர் நடித்துவரும் ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’ படம் பற்றிய உண்மையான விபரங்கள் இதன் மூலம் ரசிகர்களை சென்றடைவதுடன் தேவையில்லாத வதந்திகளுக்கும் யூகங்களுக்கும் இதன்மூலம் முற்றுப்புள்ளி வைக்கவும் முடிவு செய்திருக்கிறார் வடிவேலு.
தற்போது அவர் நடித்துவரும் இந்தப்படம், பொங்கலுக்கு வெளியாகும் விஜய், அஜீத் படங்களுடன் மோத இருக்கிறது என்று உலாவரும் செய்திகளுக்கும் வடிவேலு ட்விட்டர் மூலம் பதில் சொல்வார் என்று நம்புவோம். இவரது சக நடிகரான விவேக் எப்போதோ சமூக வலைதளங்களில் கணக்கை துவங்கிவிட்டார் என்பது குறிப்படத்தக்கது.