கல்லூரி மாணவர்கள் என்றாலே அவர்களை புகைப்பிடிப்பவர்களாகவும், மது அருந்துபவர்களாகவும் காட்டுவது தான் சினிமா வழக்கம். ஆனால் புகை பிடிக்கிறமாதிரியோ குடிக்கிற மாதிரியோ ஒரு காட்சி கூட இல்லாமல் “என்னை பிரியாதே” என்ற ஒரு கல்லூரி காதல் கதையை இயக்கியிருக்கிறார் புதுமுகம் பொன்.மணிகண்டன்
ரத்தன் மௌலி, ஷாமிலி நாயர், ரம்யா நரசிங்கர், அதிரவன் என முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில், கல்லூரி மற்றும் குடும்ப பின்னணியில் நடக்கும் ஆக்ஷன் காதல் கதையாக “என்னை பிரியாதே” இருக்குமாம்.
நட்புக்குள் காதலும், காதலுக்குள் நட்பும் நுழையும்போது, எப்படி நட்பும், காதலும் பாதிக்கப்படுகிறது? உண்மையான நட்பு எது? உண்மையான காதல் எது? இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் இந்தப்படத்தில் இருக்கிறதாம். கோவை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இதன் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.
“சமூகம் புகையாலும் மதுவாலும் சீர்கெட்டு கிடக்கிறது. இதை மேலும் நான் கெடுக்க விரும்பவில்லை. இந்தப் படத்தின் கதை நாகரீகமாகவும் கண்ணியமாகவும் இருக்கும். திரைக்கதை வேகமாகவும் இருக்கும்”. என்கிற இயக்குநர் பொன்.மணிகண்டன் 45நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்து முதல் படத்திலேயே தயாரிப்பாளரின் இயக்குநர் என்று பெயரெடுத்து விட்டார். அம்மு சினி ஆர்ட்ஸ் சார்பில் தயாராகிவரும் இந்தப்படம் அக்டோபரில் வெளியாகும் விதமாக வேகமாக தயாராகி வருகிறது.