வருடத்திற்கு 6 கோடி ரூபாய் வருமானம் ; விஷால் திட்டவட்டம்..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னை லயோலா கல்லூரியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு நடிகர் சங்கத்தலைவர் நாசர் தலைமை தாங்கினார். செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பொன்வண்ணன் மற்றும் கருணாஸ், நடிகர்கள் சிவகுமார், சூர்யா, விஷ்ணு, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி மற்றும் பல நட்சத்திரங்கள் திரளாக கலந்துகொண்டனர்.

இவர்கள் தவிர தமிழகமெங்கும் உள்ள நாடக நடிகர்கள்,சினிமா நடிகர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மூத்த கலைஞர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வாக பி.யூ.சின்னப்பாவின் மருமகளுக்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டது. கொல்லங்குடி கருப்பாயி, ஜெமினி ராஜேஸ்வரி, டி.வி சேகர் போன்ற தமிழக மாவட்டங்கள் தோறும் ஒருவர் தேர்வு செய்து நிதி உதவி வழங்கப் பட்டது.

தொடர்ந்த இந்த நிகழ்வில் நடிகர்சங்கத்தின் அடுத்தடுத்த செயல்திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டன. அதில் முக்கியமானது நடிகர்சங்க கட்டடம் கட்டுவது. நடிகர் சங்க வளாகத்தில் புதிததாக அமையவுள்ள கட்டிடத்தில் 1,000 பேர் அமரக்கூடிய பெரிய அரங்கம், பெரிய திருமண மண்டபம், சிறிய திருமண மண்டபம், ப்ரிவியூ திரையரங்கம், சங்க அலுவலகம், உடற்பயிற்சிக் கூடம், நடனப் பயிற்சிக் கூடம் ஆகியவை இடம்பெற உள்ளன. நடிகர் சங்கக் கட்டிடம் மூலமாக ஆண்டுக்கு ரூ.6 கோடி வருமானம் வரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என விஷால் கூறியுள்ளார்.

இந்த கட்டிடத்தின் மாதிரியை வசன கர்த்தா ஆருர் தாஸ் மற்றும் நடிகர் சிவகுமார் இணைந்து திறந்து வைத்தனர்.

KarthiKarunasNadigar SangamNasarPonvannanVishal