நடிகர் சங்க தேர்தலைப்போலவே பரபரப்பான காட்சிகள் தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் அரங்கேறி வருகின்றன. தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. அதன்படி 2017-19-ம் ஆண்டுக்கான தேர்தல், வரும் ஏப்-2ஆம் தேதி நடைபெற இருக்கிறது.. இதில் மொத்தம் 5 அணியினர் போட்டியிடுகின்றனர்.
விஷால் அணி சார்பில் விஷால் தலைவர் பதவிக்கும், துணை தலைவர்கள் பதவிக்கு பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், கௌரவ செயலாளர்கள் பதவிக்கு மிஷ்கின், ஞானவேல்ராஜாவும், பொருளாளர் பதவிக்கு எஸ்.ஆர் பிரபுவும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 15 பேரும் போட்டியிட உள்ளனர். இதற்கான விஷால் அணியின் அறிமுக கூட்டம் சென்னையில் நடந்தது.
இதில் விஷால் பேசும்போது, “ஒரு தயாரிப்பாளராக என் தந்தைக்கு ஏற்பட்ட நிலை வேறு எந்த தயாரிப்பாளருக்கும் ஏற்பட கூடாது. தயாரிப்பாளர்கள் யாரும் கையேந்தும் நிலைக்கு வரக்கூடாது என்பதற்காகவே போட்டியிடுகிறேன். படம் எடுக்காத தயாரிப்பாளர்களை படம் எடுக்க வைப்பதே எங்கள் அணியின் வெற்றியாக இருக்கும்” என்றார்.
ஸ்டுடியோகிரீன் ஞானவேல்ராஜா பேசும்போது, “தயாரிப்பாளர்களுக்கு கேபிள் மூலமாக வருமானம் பெற்று தரப்படும். படங்களுக்கு சாட்டிலைட் பல வருடங்களாக விற்கவில்லை. நாங்கள் வந்தால் தாணுவின் கபாலி, தெறி படங்களுக்கு கூட சாட்டிலைட் உரிமையை விற்றுதருவோம். நலிந்த தயாரிப்பை நிறுத்திய தயாரிப்பாளர்களுக்கு திரும்ப படம் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.