‘கோலிசோடா’வை வெற்றிப்படமாக்கிய விஜய்மில்டனின் வெற்றியில் அந்தப்படத்தை நம்பிக்கையுடன் வாங்கி வெளியிட்ட லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கும் முக்கிய பங்கு உண்டு. அதனால் தான் தனது அடுத்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் இயக்குகிறார் மில்டன். இதற்காக மூன்று கதைகளைச் சொன்ன விஜய் மில்டனிடம் ஒரு கதைக்கு ஓகே சொல்லியும் விட்டார்கள்.
இந்தநிலையில் ‘கோலிசோடா’வை பாராட்டிய விக்ரமை நட்பு ரீதியாக சந்திக்கப்போன விஜய்மில்டன் அவரிடமும் ஒரு கதையை சொல்லியிருக்கிறாராம். அது விக்ரமுக்கு பிடித்துப்போகவே, அடுத்த வேலைகளைப் பார்க்க அவருக்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம் விக்ரம்.
விக்ரம் ‘ஐ’ படத்தை தொடர்ந்து தரணியின் டைரக்ஷனில் நடிக்க இருக்கிறார். இந்த இடைவெளியில் பாலாஜி சக்திவேல் இயக்கும் படத்தில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்ற இருக்கிறார் விஜய் மில்டன்.. இருவர் தரப்பிலும் தங்களது தற்போதைய கமிட்மெண்ட்டுகளை முடித்துக்கொண்ட அடுத்த கணம் தங்களது புதிய படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.