என்னதான் இளைஞர் பட்டாளம் விஜய் படத்தை அணிவகுத்து பார்த்தாலும், குழந்தைகள் அவரது படத்தை விரும்பி ரசித்து பார்க்கும்போதுதான் அது முழுமையான விஜய் படமாக மாறுகிறது.. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘தெறி’ படத்திற்கு குழந்தை ரசிகர்களிடம் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வருவதை தியேட்டர்களில் காண முடிகிறது..
நடிகர் லாரன்ஸ் நடத்தி வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளும் டிவியில் தெறி’ ட்ரெய்லரை எல்லாம் பார்த்துவிட்டு, படத்தை பார்க்க வேண்டும் என்கிற தங்களது ஆசையை லாரன்ஸிடம் வெளிப்படுத்தியுள்ளார்கள்.. அவர்களது ஆசையை அப்படியே விஜய்யின் கவனத்துக்கு கொண்டு சென்றார் லாரன்ஸ்..
தனது இல்லத்தில் உள்ள 60 குழந்தைகளுக்கு ஏதாவது தியேட்டர் ஒன்றில் படம் பார்க்க விஜய் டிக்கெட் ஏற்பாடு செய்வார் என்றுதான் லாரன்ஸ் நினைத்தார்.. ஆனால் விஜயோ அந்த குழந்தைகள் மட்டும் எந்தவித தொந்தரவுமின்றி படம்பார்க்கும் விதமாக சென்னை பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில் தனிக்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டாராம்..
குழந்தைகள் உற்சாக கூச்சலுடன் படம் பார்க்க, நெகிழ்ந்துபோன லாரன்ஸ், “எனது குழந்தைகளை இரண்டரை மணி நேரம் சந்தோஷமாக வைத்திருந்ததற்கு நன்றி நண்பா” என விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.