‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் தான் அடுத்ததாக இயக்கவுள்ள படத்திற்கு ‘சீதக்காதி’ என்றுதான் பெயர் வைத்துள்ளார். விஜய்சேதுபதி இதில் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் சீதக்காதியின் முதல் பார்வையான ‘மேக்கிங் ஆஃப் ஐயா’ வெளியானது.
“சீதக்காதியில் நான் ஒரு 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறேன். இது சிவாஜி கணேசன் சார் அல்லது கமல்ஹாசன் சார் போன்ற லெஜண்ட் நடிகர்களுக்கு பொருத்தமான ஒரு படம். ஆரம்பத்தில், பாலாஜி தரணீதரன் இதில் நடிக்க தமிழ் சினிமாவின் சில பெரிய நடிகர்களை நினைத்திருந்தார். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. கைகளில் வேறு எந்த ஆப்ஷனும் இல்லாமல், அவர் என்னை அதில் நடிக்க வைக்க விரும்பினார்” என தான் இந்தப்படத்திற்குள் நுழைந்த கதையை சொல்கிறார் விஜய்சேதுபதி.
“சீதக்காதி ஒரு ஆத்மார்த்தமான படம், அது கலைக்கு முடிவே இல்லை, சாகாவரம் பெற்றது என்ற செய்தியை சொல்லும். அது யாரோ ஒருவரின் அல்லது மற்றொருவரின் மூலம் வாழும். என் 25வது படமாக இந்த அற்புதமான படம் அமைவதற்கு நான் மிகவும் பாக்கியவானாக இருக்கிறேன்” என்கிறார் விஜய்சேதுபதி.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற மிகச்சிறந்த நகைச்சுவை படத்தை தந்த விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி தரணீதரன் ஆகியோரின் காம்பினஷனில், இதுவரை பார்க்காத ஒரு படம் எங்களுக்கு அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. என்கிறார்கள் படத்தை தயாரித்துள்ள Passion ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர்..