52 கோடி ரூபாய் வசூலைக் கடந்து வெற்றிநடை போடும் ‘வீர தீர சூரன்’!

சீயான் விக்ரம் நடிப்பில், ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் சீயான் விக்ரம் நெகிழ்ச்சியுடன், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில், ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ திரைப்படம் கடந்த மார்ச் 27 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது இப்படம்.

ரிலீஸ் நாளில் பல தடைகள் ஏற்பட்ட நிலையில், அனைத்தையும் கடந்து, ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்து வருவதால், படக்குழு பெரும் உற்சாகத்தில் உள்ளது.

இது குறித்து நடிகர் சீயான் விக்ரம் கூறுகையில், “எனது ரசிகர்களுக்கு ஒரு மாஸானா, கிளாஸான, உண்மைக்கு நெருக்கமான ஒரு படைப்பை தர வேண்டுமென நீண்டநாட்களாக ஆசைப்பட்டேன். இயக்குநர் அருண்குமார் மூலம் அது நடந்தது. படம் ரிலீஸுக்கு முன்னால் பார்த்த நண்பர்கள் இது இந்த வருடத்தின் மிகப்பெரிய படமாக இருக்குமென பாரட்டினார்கள். ஆனால் ரிலீஸ் நாளான்று எதிர்பாராமல் ஏற்பட்ட தடங்கல்களால், படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு படம் முதல் ஷோ வரவில்லை என்றாலே அந்தப்படம் ஓடாது என்பார்கள். எங்கள் படம் மாலைக்காட்சி தான் வந்தது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் தந்த வரவேற்பு மறக்கமுடியாதது. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் ஒவ்வொரு விசயத்தையும், குறிப்பிட்டு பாராட்டிக் கொண்டாடினார்கள். படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றியுள்ளார்கள். என் ரசிகர்களுக்கு நன்றியைத் தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை. என் மீதான உங்கள் அன்புக்கு நன்றி. உங்களுக்காக தொடர்ந்து நல்ல படங்கள் தருவேன். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

மக்களின் பெரும் வரவேற்பில், உலகமெங்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Chiyan Vikramveera dheera sooran 2Vikramசீயான் விக்ரம்தமிழ்ப் படம் வீர தீர சூரான் 2விக்ரம்வீர தீர சூரன் 2