கி.மு.- கி.பி என குறிப்பிடுவது போல, நடிகை வேதிகாவை பற்றி சொல்லவேண்டுமானால் ப.மு-ப.பி அதாவது பரதேசிக்கு முன், பரதேசிக்குப்பின் என குறிப்பிடுவதுதான் பொருத்தமாக இருக்கும். பாலாவின் ‘பரதேசி’க்குப் பிறகு அவருக்கு நடிக்கும் வாய்ப்புள்ள கேரக்டர்களாக தேடி வருகிறது. அப்படி வந்தது தான் வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’.
அந்தப்படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிப்பில் புதியமுகம் காட்டினார் வேதிகா. அதன்பின் மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்த வேதிகா, இப்போது மீண்டும் மலையாளத்தில் பிருத்விராஜுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
இதுதவிர ‘காவியத்தலைவன்’ படத்தை தொடர்ந்து இப்போது மீண்டும் தமிழில் பிரபுதேவா தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார் வேதிகா. ஐசரிவேலனின் பேரன் வருண் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை விக்டர் ஜெயராஜ் என்பவர் இயக்குகிறார்.
இதுபற்றி வேதிகா குறிப்பிடும்போது, “பரதேசி, காவியத்தலைவன் இரண்டு படங்களும் எனது நடிப்பின் இன்னொரு பக்கத்தை வெளிப்படுத்தின. இந்த ஸ்கிரிப்ட்டும் நடிப்பை வெளிப்படுத்த நிறைய வாய்ப்புள்ள கதை தான். தற்போது கன்னடத்தில் ‘சிவலிங்கா’ என்கிற படத்தில் நடித்து வருகிறேன்.. அதை முடித்துவிட்டு செப்டம்பரில் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.