’கடைசி விவசாயி’ படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள்!

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில், விஜய் சேதுபதி தயாரித்து நடித்த ’கடைசி விவசாயி’ திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருப்பதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் மணிகண்டன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மக்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட கடைசி விவசாயி திரைப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரமாக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டிரைபல் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ’கடைசி விவசாயி’ படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைக்க காரணமாக இருந்த விருது தேர்வு குழுவினருக்கும், இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும், மூத்த பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், இணையதள ஊடகங்களுக்கும் இந்நேரத்தில் என் சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

’கடைசி விவசாயி’ படத்தினில், முதிய வயதிலும் சோர்வின்றி நடித்து, அக்காதாப்பாத்திரத்தை உயிர்ப்பித்து, கொண்டாட வைத்த மறைந்த அய்யா நல்லாண்டி அவர்களுக்கும், இப்படத்தினை உருவாக்க மிகபெரும் ஒத்துழைப்பை தந்த ஊர்மக்களுக்கும், இப்படத்தினை உலகம் முழுதும் கொண்டு சேர்த்த விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் 7சிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களுக்கும், இந்தப் படத்தினை உருவாக்க உறுதுணையாகவும் இருந்து, சிறப்பாக நடித்தும் கொடுத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களுக்கும், சக தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேசிய விருதுக்காக மனதார பாராட்டிய மக்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 69 வது தேசிய விருதுகளில், தமிழ் மொழிக்கு, கடைசி விவசாயி படம் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது மிகப்பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இது போல படைப்புகளை உருவாக்க, இந்த விருது மிகப்பெரிய ஊக்கம் தந்துள்ளது. மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

69 national awardsDirector Manikandankadaisi vivasayikadaisi vivasayi got two national awardsmakkal SelvanVijay Sethupathi