ஜெ.என் சினிமாஸ் நிறுவனம் சார்பில் ஜெ.பார்த்தசாரதி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் ‘ரெட் சாண்டல் வுட்’. (RED SANDAL WOOD) இந்த படத்தில் வெற்றி நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தியா மயூரிக்கா நடித்துள்ளார். மற்றும் கேஜிஎப் ராம் , எம் எஸ் பாஸ்கர் , கணேஷ் வெங்கட்ராமன், மாரிமுத்து, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத் , வினோத் சாகர், பாய்ஸ் ராஜன், லட்சுமி நாராயணன், சைதன்யா ,விஜி, அபி ,கர்ணன் ஜானகி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தயாரிப்பாளர் ஜெ.பார்த்தசாரதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். ஆஸ்கார் விருது வென்ற ரெசுல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்துள்ளார். ரிச்சர்ட் கெவின் எடிட்டிங் செய்ய, மிராக்கில் மைக்கேல் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். பாண்டியன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்க , மணவை புவன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் குரு ராமானுஜம் படம் குறித்து கூறுகையில், ”இந்த கதை 2015இல் தமிழகத்தின் ஜவ்வாது மலை , படவேடு மலைப்பிரதேசங்களில் இருந்து ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட போனதாக சொல்லி திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர வனத்துறையினரால் 20 தமிழர்களை சுட்டு கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது. படத்தில் நாயகன் வெற்றி கதாநாயகியின் அண்ணனான கருணாகரன் என்னும் நபரை தேடி ரேணிகுண்டாவிற்கு செல்கிறார் . அங்கு வெற்றி செம்மரம் கடத்த வந்திருப்பதாக சொல்லி வனத்துறையினரால் கைது செய்யப்படுகிறார் . அவருடன் இணைந்து இன்னும் சில தமிழர்களை கைது செய்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறான் வெற்றி . அவர்களுக்கு பின்னால் இருக்கும் கடத்தல்காரர்கள் யார் என்பதை விசாரிக்கிறார்கள். கடத்தல்காரர்கள் யார் என்பது விசாரணையில் தெரிய வராத போது அவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் .
கடத்தல் காரனை ஏன் பிடிக்க நினைத்தார்கள் ? என்கவுண்டர் செய்ய சொன்னது யார் ? சாதாரண ஜெயில் தண்டனை கொடுக்கக்கூடிய செம்மரம் வெட்டுக்கு மனித உரிமை மீறலை செய்து எல்லோரையும் என்கவுண்டர் செய்தது எப்படி. இதில் பிரபாவிற்கும் கர்ணாவிற்கும் என்ன நடந்தது என்பது உண்மைக்கும் மனதிற்கும் நெருக்கமான காட்சிகளுடன் விவரிக்கிறது திரைக்கதை.
படபிடிப்பு ரேணிகுண்டா, தலக்கோணம், தேன்கணி கோட்டை போன்ற காட்டு பகுதிகளில் நடைபெற்றது.
படம் வருகிற செப்டம்பர் மாதம் 8 ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகாவிலும் ஸ்ரீ சுப்புலக்ஷ்மி மூவீஸ் கே.ரவி வெளியிடுகிறார்.” என்றார்.