பொதுவாக நடிகர்களைப்போல நடிகைகள் தங்களது மேனேஜர்களுக்கு சினிமா தயாரிப்பில் உதவி செய்து கைதூக்கி விடுவது இல்லை என்பதுதான் நடைமுறை.. பத்து வருடங்களுக்கு முன்பு ஜோதிகா, ரம்பா, லைலா மூவரும் தங்களது மேனேஜர் தயாரித்த ஒரு படத்தில் நடித்தார்கள் என்பது மிகப்பழைய வரலாறு.
ஆனால் தன்னிடம் ஏழு வருடத்திற்கு முன்புவரை மேனேஜராக இருந்த கிரிதர், ஒரு படம் தயாரிக்கப் போகிறேன், நீங்கள் தான் நடிக்கவேண்டும் என்றதும் உடனே ஒப்புக்கொண்டு உதவிக்கரம் நீட்டியுள்ளார் த்ரிஷா. அதுதான் ‘நாயகி’ படமாக உருவாக உள்ளது. இந்தப் படத்திற்கான பூஜை இன்று ஏ.வி.எம்மில் நடைபெற்றது.
இந்த பூஜையில் கலைப்புலி தாணு கலந்துகொண்டு வாழ்த்தினார். படத்தை இயக்கும் கோவி, இது முழுக்க முழுக்க காமெடிப்படம் தான் என்றும் அதில் கொஞ்சமே கொஞ்சம் ஹாரர் கலந்து இருப்பதால் காமெடி ஹாரர் படம் என்று வேண்டுமானால் சொல்லலாம் என்றார்.
இந்தப்படத்தில் தான் வில்லியா, கொலைகாரியா என்பதுபற்றி எல்லாம் வாய்திறக்க மறுத்துவிட்ட த்ரிஷா, ஆச்சர்யமாக இந்தப்படத்தில் முதன்முதலாக பாடப்போகிறார். கணேஷ் வெங்கட்ராம், கோவைசரளா, பிரமானந்தம் என பக்கா நட்சத்திர கூட்டணியோடு தயாராகும் இந்தப்படம் முதலில் தமிழில் தயாராகி, பின்னர் தெலுங்கில் டப் பண்ணப்பட்ட இருக்கிறதாம்.