அடிக்கடி மக்கள் மத்தியில் புழங்கும் ஒரு வார்த்தையை படத்துக்கு தலைப்பாக வைப்பது ஒரு புத்திசாலித்தனமான செயல். அந்தவகையில் மத்திய அரசின் மூலமாக கடந்த இரண்டு வருடங்களாக பொதுமக்களை மிரட்டி வந்த வார்த்தை தான் ‘ஆதார்’. அதனால் அதையே தன் படத்திற்கு தலைப்பாக வைத்துவிட்டார் அறிமுக இயக்குனர் விக்டர் டேவிட்சன். இவர் திரைப்பட கல்லூரி மாணவரும் கூட.
இன்று அரசியலும் சரி.. அரசாங்கமும் சரி.. கார்ப்பரேட் நிறுவனங்கள் கைக்கு போய்விட்டது. ஒரு நாளைக்கு 28 ரூபாய் இருந்தால் போதும்.. ஒரு மனிதன் எளிதாக வாழ்ந்து விடலாம் என ஒரு மத்திய அமைச்சரே சொல்கிறார் என்றால் நாட்டின் நிலையை நினைத்து பாருங்கள்.
அப்படி இந்த கார்ப்பரேட் முதலாளிகள் ஒன்று கூடி நடத்தும் இந்த அரசாங்கத்தில் எதுவுமே நடக்காது என முடிவு செய்த மூன்று இளைஞர்கள் ஒன்றுகூடி எடுக்கும் முடிவுதான் இந்த ‘ஆதார்’ திரைப்படம். அங்காடி தெரு’ மகேஷ், மித்ரா குரியன் இவர்களோடு இயக்குனர் சமுத்திரக்கனி மற்றும் விவேக் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பிரபல கேரள நடிகர் மதுவும் (தர்மதுரை படத்தில் ரஜினியின் தந்தையாக நடித்தவர்) ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.