கடந்த மார்ச்-1 முதல் நடைபெற்று வந்த தயாரிப்பாளர் சங்க போராட்டம், நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது .
இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் , பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, கௌரவ செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். செய்தியாளர்களிடம் பேசிய விஷால் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழ் திரைபடங்களின் படப்பிடிப்பும், வெளியீடும் ஆரம்பமாகிறது என கூறினார்.
“தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த FEFSI தொழிலாளர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். தமிழ் திரைத்துறை ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினிமயமக்கபடும் இனி முழு வெளிப்படைத்தன்மையோடு இருக்கும். தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை தொடங்கும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகப்பட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் விற்கப்படாது. அது கண்காணிக்கப்படும். அதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா வெளியீட்டை முறைப்படுத்த ஒரு குழு அமைத்து, அதன்மூலம் பட்டியலிட இருக்கிறோம். கடந்த 16-ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும். சம்பளம் தொடர்பாக நடிகர்களுடன் பேச வருகிற சனிக்கிழமை எல்லா நடிகர்களையும் சந்திக்கிறோம். சம்பள விவகாரம் குறித்து அதற்கு பின்னர் தெரிவிக்கப்படும்.காலா படம் வெளியீடு தள்ளிப்போகிறது. தனுஷ் மற்றும் வுண்டர்பார் நிறுவனத்திருக்கு நன்றி. அவர்களின் ஓத்துழைப்பு மிகப்பெரியது.
காலா ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.வேறு ரிலீஸ் தேதியை காலா படக்குழுவினர் பின்னர் அறிவிப்பார்கள்.தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுக்க டிக்கெட் விற்பனை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார் விஷால். இந்த சந்திப்பின்போது பெப்சி தலைவர் RK செல்வமணி, கௌரவ செயலாளர் SS துரைராஜ் , செயற்குழு உறுப்பினர்கள் RK.சுரேஷ், உதயகுமார் , AL உதயா, பிரவீன்காந்த், மிட்டாய் அன்பு மற்றும் SS குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.